தேமுதிகவுக்கு மரியாதை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி.. பிரேமலதா விஜயகாந்த் சொன்ன அந்த வார்த்தை!
சென்னை: தேமுதிகவுக்கு மரியாதை தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், தெளிவான முடிவை விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக ஆகிய கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட சூழலில், தேமுதிக நிலைப்பாடு என்ன என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது. ஜனவரி மாதமே கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறி இருந்தார்.

ஆனால் தேமுதிக எதிர்பார்த்த அளவிற்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தொகுதிகளை ஒதுக்க முன் வரவில்லை. இதனால் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிக்க பிரேமலதா விஜயகாந்த் கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொண்டிருக்கிறார். தேமுதிகவிடம் இதுவரை பாஜக தரப்பில் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒரு பக்கமும், திமுக சார்பாக எவ வேலு மறுபக்கமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இறுதியாக திமுக கூட்டணியில் இணைய தேமுதிக முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. திமுக தரப்பில் 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் சந்திப்பு இன்னும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் எங்களுக்கு அனைத்து கட்சிகளும் தோழமை கட்சிகள் தான். அதேபோல் தமிழ்நாட்டில் எங்களுக்கு பூத் கமிட்டி வலுவாக உள்ளது. ஆளுங்கட்சியை போலவே நாங்கள் பூத் கமிட்டி அமைத்துள்ளோம்.
மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை யானை பசிக்கு சோளப்பொறி போல் இருக்கிறது. மருத்துவ திட்டங்கள், ரயில்வே திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் தேர்தலை ஒட்டி வரக்கூடிய பட்ஜெட் என்றால், கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் இன்னும் அதிகப்படியான அறிவிப்புகள் இருந்திருக்க வேண்டும். விரைவில் கூட்டணி குறித்த தெளிவான முடிவை அறிவிப்போம்.
அதேபோல் எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று தெரிவித்துள்ளார். இதனால் பிரேமலதா விஜயகாந்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின்னராவது பழம் நழுவி பாலில் விழுமா என்ற கேள்வி திமுகவினர் மத்தியிலும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications