நிலமை மாறியுள்ளதால்.. அரசின் நிலைப்பாடும் மாறி உள்ளது.. ஓபிஎஸ்க்கு பிடிஆர் பளீர் பதிலடி
சென்னை : நிலைமைக்கு ஏற்ப வரியில் மாறுதல் செய்யும் உரிமையை மாநில அரசு இழந்து விட்டது. எனவே, நிலமை மாறியுள்ளதால் அரசின் நிலைப்பாடு மாறி உள்ளது. ஆனால், கொள்கை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி க்குள் வர தயாராக உள்ளது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 250 புதிய தள்ளு வண்டிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வண்டிகளை வியாபாரிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் "பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வரும் நிலைப்பாட்டை திமுக அரசு மாற்றிக்கொண்டதா?" என முன்னாள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பிடிஆர் விளக்கம் அளித்தார்.

பிடிஆர் விளக்கம்
அப்போது அவர் கூறும் போது, " கடந்த 2018ம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டு காலக்கட்டத்தில் பெட்ரொல், டீசல், கச்சா எண்ணெய் விலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.

பெட்ரோல் விலை எவ்வளவு
2001ம் ஆண்டு கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 10 டாலராக இருந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 130 டாலராக விற்பனை செய்யப்பட்டது. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது.

பெட்ரோல் மீது செஸ் வரி
2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி மாற்றம் ஏற்படும் போது நேர்முக வரி 55 பைசாவாகவும், மறைமுக வரி 45 பைசாவாகவும் இருந்தது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நேர்முக வரியை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு குறைத்து கொண்டது. பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற போது பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் செஸ் வரி 10 ரூபாயாகவும், டீசல் வரி 5 ரூபாயும் இருந்தது. ஆனால் தொடர்ந்து உயர்த்தப்பட்டு தற்போது பெட்ரோல் வரி 32 ரூபாயாகவும், டீசல் வரி 31 ரூபாயாகவும் செஸ் வரி உள்ளது.

ஒன்றிய அரசு விவாதம்
மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட செஸ் வரியை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்காமல் வைத்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரலாம் என ஒன்றிய அரசு சொல்லவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பில் கொடுப்பட்டதை ஒன்றிய அரசு சுட்டி காட்டி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அரசு விரும்பவில்லை
ஒன்றிய அரசின் மொத்த வருமானத்தில் 20 சதவீதம் பெட்ரோல், டீசல் வழியாக வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசும் விரும்பவில்லை, மாநில அரசுகளும் விரும்பவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிகளை ஒன்றிய அரசு குறைத்து உள்ளதால் மக்கள் மீது இரு மடங்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது.

எப்படி நடத்த முடியும்
உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு நேர்முக வரியை 100 சதவீதம் ஒன்றிய அரசே எடுத்து கொள்கிறது. மாநிலங்களுக்கு பெட்ரொல், டீசல், ஆல்கஹால் ஆகிய இரு வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. மாநில வரி வருவாயையும் ஒன்றிய அரசு எடுத்து கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்?

செஸ் வரி விவகாரம்
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரும் விவகாரத்தில், நிலைமைக்கு ஏற்ப வரியில் மாறுதல் செய்யும் உரிமையை மாநில அரசுகள் இழந்து விட்டது. எனவே, நிலமை மாறியுள்ளதால் அரசின் நிலைப்பாடு மாறி உள்ளது. ஆனால், கொள்கை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி க்குள் வர தயாராக உள்ளோம்" இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications