"மின் கட்டணம் செலுத்த ஆதார் கட்டாயம்" - குடும்பங்களில் சொத்து சண்டை, பிரளயமே வெடிக்குது அரசே!
சென்னை: மின் கட்டணம் செலுத்த ஆதார் கட்டாயம் என தமிழக மின்சார வாரியம் அறிவித்தது போதும்.. சொத்து பிரிக்கப்படாத குடும்பங்களில் வெட்டு குத்து சண்டை என பிரளயமே ஏற்பட்டுவிட்டதை அரசு கவனத்தில் கொள்ளுமா? என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
ஆதார் எண் கட்டாயம் என்பது பொதுவாக நடைமுறைக்கு வந்துவிட்டது. எங்கும் ஆதார்.. எதிலும் ஆதார் என்பது தவிர்க்க இயலாததுதான்.
இதனடிப்படையில்தான் மின் கட்டணத்தை செலுத்த ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்கிறது தமிழக மின்சார வாரியம். அப்படி ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் மின் கட்டணத்தை ஏற்கவும் முடியாது என்கிறது மின்சார வாரியம். இதனையும் உடனே செய்தாக வேண்டும் என்கிற நெருக்கடி தரப்படுகிறது. இது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மின் இணைப்புடன் ஆதார் எண்! மின்சார வாரியம் பிடிவாதம் பிடிக்கக் கூடாது! கடுகடுக்கும் எஸ்.டி.பி.ஐ.!
செல்போன் பஞ்சாயத்து
ஆதார் எண்ணை இணைப்பதில் அடிப்படையான சிக்கல்கள் இருக்கின்றன என்பதை அரசு தரப்பு உணரவில்லையா? என்கிற கேள்வி எழுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் மின்சார இணைப்பை பெறும் போது கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணுக்குதான் ஓடிபி போகும்; ஆகையால் புதிய செல்போன் எண்ணை சேர்த்தாக வேண்டும். சரி இதனைக் கூட பொதுமக்கள் செய்துவிடுவார்கள் என வைத்து கொள்ளலாம்.
யாருடைய ஆதார்?
இந்த ஆதார் எண் கட்டாயம் என்பது கிராமப்புறங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பல மின் இணைப்புகள் தாத்தாக்கள் பெயரில் இருக்கின்றன. அத்தகைய வீடுகளில் சொத்துகள் பாகப் பிரிவினை செய்யப்படாமல் கூட்டு அனுபவமாகவும் இருந்து வருகின்றன. இப்போது மின் இணைப்புக்கு யாருடைய ஆதாரை கொடுப்பது? யாருடைய செல்போன் எண்ணை கொடுப்பது? இதற்கு ஒரே வழி மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். சரி மின் இணைப்பை மாற்றம் செய்யலாம் எனில் யாருடைய பெயருக்கு மாற்றுவது? குடும்பத்தில் ஒருவர் பெயருக்கு மட்டும் மின் இணைப்பை மாற்ற மற்றவர்கள் அனுமதிப்பது என்பது சாத்தியம்தானா? இது கூட, அழைத்துப் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என வைத்து கொள்ளுங்கள்.
நிலுவை வழக்குகள் விவகாரம்
சொத்து பிரிவினைக்காக நீதிமன்றங்களில் வழக்குகள் காத்து கொண்டிருக்கின்றன. அந்த வழக்குகளில் தொடர்புடைய மின் இணைப்புகளுக்கு எந்த ஆதார் எண்ணை இணைப்பதாம்? அப்படி அனுபவித்துக் கொண்டிருப்பவர் மின் இணைப்பை தம் பெயர் மாற்ற முடியுமா? அல்லது சொத்துக்கு உரிமை கோருபவர் தம் பெயருக்கு மின் இணைப்பை மாற்ற முடியுமா? மற்றொரு நபர் அனுமதித்துவிடுவாரா? இத்தகைய குழப்பங்கள் குடும்பங்களில் வெட்டு, குத்து தீரா பகைக்கு வழிவகுக்காதா?
கால அவகாசம் கிடைக்காதா?
ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்பதுதான் தமிழக மின்சார வாரியத்தின் உறுதியான நிலைப்பாடாகவே இருக்கட்டும். அதற்கு கால அவகாசம் தர முடியாதா? அதற்கு வழிகாட்டுதல்கள் வழங்கக் கூடாதா? நாம் மேலே சொன்ன வில்லங்க சிக்கல்களுக்கு என்ன தீர்வைத் தருமாம் மின்சார வாரியம்? இப்படி விடைதெரியாத கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வரை கால அவகாசம் அளிப்பதுதான் மக்களுக்கு செய்யும் ஒற்றை நன்மையாகவே இருக்கும் என்கின்றனர் பொதுமக்கள்.
அதிருப்தியில் மக்கள்
தமிழக அரசு மின் கட்டண உயர்வை அண்மையில்தான் உயர்த்தியது. இந்த சுமையை பொதுமக்களால் தாங்க முடியவில்லை. இந்த மனப்புழுக்கம், அழுத்தங்களின் வலியே ஆறாத நிலையில் இப்போது ஆதார் கட்டாயம் என பாடாய்படுத்துவது எப்படி சரியாகும்? என ஆதங்கப்படுகிறது திருவாளர் பொதுஜனம். ஆள்வோர் கவனமெடுத்து பொதுமக்கள் இன்னல் போக்குவார்களா?