எதுவுமே சரியில்லை..பொம்மை முதல்வர்..திறமையற்ற அரசு..ஆளுநரிடம் புகார் பட்டியல் வாசித்த பழனிச்சாமி
சென்னை: திறமையில்லாத முதல்வர் உள்ளார். காவல்துறையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். உளவுத்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்து விட்டது என்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து புகார் அளித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவியை இன்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். ஆளுநரை சந்தித்த பின்னர் அது குறித்து முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
அப்போது அவர், கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் உள்ள மர்மங்கள் குறித்து சரியாக விசாரணை நடைபெற வில்லை என்று கூறினார். உளவுத்துறை முன்னதாகவே மாநில அரசை எச்சரித்து இருந்தால் கலவரம் நடந்திருக்காது என்றும் பள்ளியானது தீக்கிரையாகியிருக்காது. முதல்வர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

போதை கலாச்சாரம்
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. நிர்வாக திறமையின்மை காரணமாக போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க முடியவில்லை. அண்டை மாநிலத்தில் இருந்து சர்வ சாதாரணமாக போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. இளைஞர்களும், மாணவர்களும் சீரழியக்கூடிய நிலை உள்ளது. எது கிடைக்கிறதோ இல்லையோ போதைப்பொருள் தடையில்லாமல் கிடைக்கிறது.

ஆளுநரிடம் புகார்
திறமையில்லாத முதல்வர் உள்ளார். காவல்துறையை கட்டுப்படுத்த முடியவில்லை. உளவுத்துறை செயலிழந்து விட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்து விட்டது. இது பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் அளித்தோம். தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் கமிஷன், கலெக்சன், கரப்சன் திமுக அரசின் தாரக மந்திரமாக உள்ளது. போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்.

எங்கும் லஞ்சம்
திமுக ஆட்சியில் எந்த துறையை எடுத்தாலும் லஞ்சம்தான். மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. அரசு மருத்துவமனைகளில் முக்கிய மருந்துகள் எதுவும் இருப்பில் இல்லை. இதற்குக் காரணம் அந்த அமைச்சர்தான். அதற்கு பதிலாக அதிகாரிகளை மாற்றுகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் சர்வதேச தரத்திலான மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டன.

மருந்து தட்டுப்பாடு ஊழல்
முறையான மருந்து கொள்முதல் இல்லை. மக்கள் வரிப்பணம் வீணாகிறது. மருந்து கொள்முதலில் ஊழல் நிலவுகிறது. காலாவதி மருந்துகள் மருத்துவமனைகளில் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் நிதி சரியாக செலவு செய்யப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையும் அதிகாரமும் பறிக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற வேலை குறித்து அச்சடிக்கப்பட்ட விளம்பர பேனரில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது.

டெண்டர் முறைகேடு
டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்துள்ளது. டெண்டர் எடுத்து விட்டு பணிகள் நடைபெறாமலேயே பில் போட்டு பணத்தை வாங்கிக் கொள்கின்றனர். கரூரில் இதுபோல நடந்துள்ளது அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல டெண்டர் ஊழலுக்கு இது ஒன்றே போதும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

உளவுத்துறை தோல்வி
கோவை கார் குண்டு வெடிப்பு பற்றி மத்தியஅரசு எச்சரித்தும் தமிழக உளவுத்துறை அதை கவனிக்காமல் விட்டு விட்டனர். மிகப்பெரிய தீவிரவாத சதி நிகழ்ந்துள்ளது. இந்த புகார்களை எல்லாம் ஆளுநருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் அனைத்தும் சரியாக உள்ளது. அதனால்தான் திமுக ஆட்சியில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications