வைகைக் கரை தமிழ்ப்பண்பாட்டு மக்கள் இறை நம்பிக்கையற்றவர்களா? ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம்
Recommended Video
சென்னை: கீழடி அகழாய்வுகள் மூலம் வைகைக் கரை தமிழ்ப் பண்பாட்டு மக்கள் இறை நம்பிக்கையற்றவர்களாக இருந்தனரா என்பது குறித்து சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கீழடி அகழாய்வுகள் தொடர்பான விவாதங்களை முன்வைத்து பல்வேறு கேள்வி பதில் வடிவங்களில் சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்து வருகிறார். அதில் கீழடி வைகைக் கரை தமிழ்ப் பண்பாட்டு மக்கள் இறைநம்பிக்கையற்றவர்கள் என்ற முடிவுக்கு வர இயலுமா? என்கிற விவாதம் குறித்து எழுதிய பதிவு:
கேள்வி: கீழடியில் இதுவரை வெளியான அகழ்வாய்வுத் தரவுகளின் அடிப்படையில் அங்கு சமயம் மற்றும் இறைவழிபாட்டை முன்னிலைப்படுத்தும் தடயங்கள் கிடைக்கவில்லை என்பதை வைத்து வைகைக் கரை தமிழ்ப்பண்பாட்டு மக்கள் இறை வழிபாட்டில் நம்பிக்கையற்றவர்கள் என்ற முடிவுக்கு வர முடியுமா?
விடை : முடியாது. ஏனெனில் கீழடியில் இது வரை தோண்டப்பட்டு இருப்பது சிறு பகுதியே. எதிர்காலத்தில் தோண்டப்படும் போது எத்தகைய சான்றுகள் கிடைக்கும் என்பதை இப்போது ஊகிக்க முடியாது. அப்படியே எதுவும் கிடைத்தாலும் அடுக்கு நிலை அகழ்வாய்வின் அடிப்படையில் (Stratigraphy) எந்த அடுக்கில் என்ன கிடைக்கிறது என்பதே முக்கியமானது. அதைப் பொறுத்தே கால நிர்ணயம் மற்றும் பண்பாட்டு நிலை பற்றி முடிவு செய்வார்கள்.
சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியலில் நடுகல் வழிபாடு, மரத்தில் உறையும் தெய்வம், கொல்லிப் பாவை, கானுறை தெய்வம், அணங்கு, வேலன் வெறியாட்டு போன்ற மரபுகள் பேசப்படுகின்றன. திணை சார்ந்த கருப்பொருளாகவும் கடவுளர் அடையாளம் காட்டப்படுகிறார்கள். தாய்த் தெய்வ வழிபாட்டின் மேலதிகச் செல்வாக்கும் புலனாகிறது.
ஆனால் சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியலில் நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் ( Beliefs and Faith System) இருந்தன என்றாலும் மனித வாழ்வியலின் நடைமுறை எதார்த்தமே காத்திரமாக கொண்டாடப்படுகிறது.
"ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே"
என்ற புறநானூற்று ( 335) வரிகள் தொல்தமிழர் சமயத்தின் முன்னுரிமையை தெளிவாக்குகிறது. எதிரிகளிடமிருந்து தனது குடிகளைக் காக்க போரிட்டு மாண்ட வீரனுக்கு எழுப்பப்படும் நடுகல் தான் தமிழர் வழிபாட்டு மையப்புள்ளி என்பதை இது தெளிவுபடுத்துகிறது. அதுவே நீத்தார் பெருமையின் நிலைக்களன்.
எதுவாயினும் வைகை கரை தமிழ்ப் பண்பாட்டு காலத்தின் வழிபாட்டு மரபுகள், நம்பிக்கைகள், முன்னுரிமைகள், பற்றி எதிர்கால அகழ்வாய்வுகள் சான்றளிக்கக் கூடும்.
எனவே இதுபற்றி தீர்மானமான தீவிரக் கருத்துகளை தவிர்ப்பது நலம் என்று தோன்றுகிறது.
There is an aphorism, "Absence of evidence is not evidence of absence,"
"தடயம் கிட்டவில்லை என்பது தடயம் இல்லை என்பதற்கான தடயம் இல்லை"
இது சிந்துவெளிக்கும் கீழடிக்கும் மட்டும் அல்ல எந்தச் சூழலுக்கும் பொருந்தும்.
May like to google for:
Evidence of absence
Absence of Evidence
இவ்வாறு ஆர் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் விளக்கம் அளித்துள்ளார்.