இல்லாத ஊருக்கு வழி தேடுவதை போல.. இல்லாத கட்சிக்காக ஊர் ஊராக செல்கிறார் ராகுல் காந்தி -குஷ்பு அட்டாக்
சென்னை: மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை நமக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணமே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம். கொரோனா கட்டுப்பாடுகளை கூட அரசியலாக்கும் இவர்களுக்கு மக்கள் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கடுமையாக சாடியுள்ளர். மேலும் பாரத் ஜோடோ யாத்திரையால் எந்த ஒரு பலனும் இல்லை என்றும் குஷ்பு விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாத யாத்திரை 12 மாநிலங்களை கடந்து தற்போது டெல்லிக்கு வந்துள்ளது.
சாதாரண ஈ தானே என அலட்சியம் வேண்டாம்! ஈ கடித்ததில் 13 ஆண்டுகளை இழந்த பெண்! 2 கால்களும் போச்சு.. பாவம்
ஜோடோ யாத்திரையை விமர்சித்த குஷ்பு
பாரத் ஜோடோ யாத்திரை பாஜகவுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நடைபயணத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதாகவும் அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இத்ற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு, ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரையை விமர்சித்துள்ளார். இது தொடரபாக குஷ்பு கூறியிருப்பதாவது:-
எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது
இல்லாத ஊருக்கு வழி தேடுவதை போல இல்லாத கட்சிக்காக ராகுல் காந்தி ஊர் ஊராக நடைபயணம் சென்று கொண்டிருக்கிறார். இந்த நடைபயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்திக்கு ஏமாற்றமே மிஞ்ச போகிறது. ராகுல் காந்தி சென்றதுமே அவரை மக்கள் மறந்துவிட்டார்கள். ராகுலின் நடைபயணம் நடைபெற்று கொண்டிருக்கும் போதுதான் குஜராத் தேர்தலில் தோல்வி, டெல்லியில் தோல்வி என்ற செய்தி அவருக்கு கிடைத்தது.
இது தான் அவர்களின் உண்மை முகம்
ராகுல் காந்தியின் யாத்திரை மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தால் வாக்களித்து வெற்றி பெற செய்து இருப்பார்கள். கொரோனா மீண்டும் வருகிறது என்ற பீதியில் உலகமே இருக்கிறது. இதற்காக மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், ராகுல் காந்தியின் யாத்திரையை முடக்கும் சதியாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறுகிறார். இது காங்கிரஸ் தலைவர்களின் உண்மை முகத்தை காட்டும் வகையில் உள்ளது.
ஜால்ரா தட்டுகிறார்கள்
ராகுல் காந்தியிடம் நற்பெயர் வாங்க அவரிடம் இப்படி ஜால்ரா தட்டுகிறார்கள். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை நமக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணமே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம். கொரோனா கட்டுப்பாடுகளை கூட அரசியலாக்கும் இவர்களுக்கு மக்கள் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். தமிழகத்தில் பாஜக வளர்ந்து உள்ளதாக திமுகவே ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி இனி கிட்டாது. படு தோல்வியே மிஞ்சும்" என்றார்.
பதிலடி கொடுக்கும் வகையில்..
டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பாரத் ஜோடோ யாத்திரையின் மிகப்பெரிய வெற்றி பாஜகவுக்கு பயத்தை கொடுத்துள்ளது. அதனால்தான் கொரோனா பிரச்சினையை எழுப்புகிறது. கொரோனா எங்கும் இல்லை. யாருக்கும் எதுவும் ஆகவில்லை. பிரதமர் மோடி கூட முகக்கவசம் அணிவது கிடையாது. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இந்த யாத்திரையை நிறுத்துவதற்காகவே கட்டுப்பாடுகள் போடப்படுகின்றன" என்று பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் குஷ்பு விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.