தேடி வந்த பிரதமர் பதவியை மறுத்தவர்தான் ராகுல் காந்தி.. அவரைப் போய்.. அழகிரி வேதனை
சென்னை: தேடி வந்த பிரதமர் பதவியை வேண்டாமென மறுத்தவர் ராகுல் காந்தி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் நடத்தப்படவுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவராக பொறுப்பேற்க மாட்டேன் என ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனினும், அவரை தலைமை பதவிக்கு வருமாறு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். அதே சமயத்தில், ராகுல் காந்தி உட்பட நேரு குடும்பத்தைச் சேர்ந்த மற்ற யாரும் காங்கிரஸ் தலைமை பதவிக்கு வரக் கூடாது என கட்சியின் மற்றொரு தரப்பு தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில், குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதேபோல, ராகுல் காந்தி மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. இதனால் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுப்பதில் பெரிய அளவில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் சென்னையில் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
யார் அதிக விமர்சனங்களுக்கு உட்படுகிறார்களோ அவர்கள் மாபெரும் தலைவர்கள் என்று அர்த்தம். மகாத்மா காந்தியை கூட நம் நாட்டில் விமர்சித்திருக்கிறார்கள். அவரது செயல்பாடுகள் கொச்சைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் கடந்து காந்தியடிகள் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். அதுபோன்று தான் தற்போது ராகுல் காந்தி மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ராகுல் காந்தி மிகவும் நல்ல இளைஞர். 2010-ம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கே, தான் வகித்த பிரதமர் பதவியை ராகுல் காந்திக்கு வழங்க முன்வந்தார். மற்றவர்களாக இருந்திருந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் ராகுல் காந்தியோ பிரதமர் பதவியை வேண்டாம் என நிராகரித்தார். தன்னை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவரான மன்மோகன் சிங்கே பிரதமர் பதவியில் தொடர வேண்டும் எனக் கூறியவர் ராகுல் காந்தி. ஒன்றை பெறுவதை காட்டிலும் துறப்பதில் மகிழ்ச்சி அடைபவர் ராகுல் காந்தி. எனவே ஒரு பண்பட்ட, வலிமையான, சிந்தனைத் திறன் கொண்ட நல்ல இளைஞராக ராகுல் காந்தி திகழ்கிறார்.
முதலில் காங்கிரஸுக்கு தலைவர் இல்லை என்ற வாதமே தவறானது. காங்கிரஸை பொறுத்தவரை அகில இந்திய பொதுக்குழு கூடி அங்கீகாரம் அளித்தால்தான் ஒருவர் நிரந்தரத் தலைவர் ஆக முடியும். ஆனால் கொரோனா காரணமாக இரண்டரை ஆண்டுகளாக பொதுக்குழு கூடவில்லை. அதே நேரத்தில், காங்கிரஸ் செயற்குழு சோனியா காந்தியை தலைவராக தேர்ந்தெடுத்தது. ஆனால் பொதுக்குழு அங்கீகாரம் கிடைக்காததால் அவர் இடைக்காலத் தலைவராக இருக்கிறார். சோனியா காந்தி அதிகாரப்பூர்வமாக தலைவராக இல்லாவிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு அவர்தான் தலைவர். சோனியா காந்தி இருக்கும் போது காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லை என்று சொல்வதே அபத்தமானது. இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறினார்.












Click it and Unblock the Notifications