அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை.. அதிகாலையில் பரபரப்பு
எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தனியார் மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறி, இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது..
ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணியிடம் சோதனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
எஸ்.பி.வேலுமணி வழக்கில் லஞ்ச ஒழிப்புதுறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு - உயர்நீதிமன்றம்
வேலுமணி
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன... இதை அடிப்படையாக வைத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது... கிட்டத்தட்ட 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
வேலுமணி
இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரி வேலுமணி தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே சமயம் எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. மேலும் 2 ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
இடைக்கால தடை
இந்த வழக்கு கடந்த 7-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என தெரிவித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் வீசாரணைக்கு வந்தது. அப்போது வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கின் விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.
விஜயபாஸ்கர்
இப்படிப்பட்ட சூழலில்தான், கோவையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்... அதேபோல, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது முறையாக எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, புதுக்கோட்டை, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
மாஜிக்கள்
வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தகுதியானது என விதிகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில், இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது..
திருவேங்கைவாசல்
புதுக்கோட்டை திருவேங்கைவாசலில் உள்ள குவாரி மற்றும் வீடுகளில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடந்து வருகிறது,. சென்னையில் 5, சேலத்தில் 3 இடங்கள் என மொத்தம் 14 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.. கோடம்பாக்கம் பகுதியில் 3 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.. இவர்கள் 2 பேருக்கும் உதவியாக, 2 ஒப்பந்தக்காரர்கள் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது..
சுகுணாபுரம்
தொண்டாமுத்தூர் வடவள்ளி உள்ளிட்ட 5 இடங்களிலும், கோவை அதிமுக நிர்வாகி சந்திரசகேர் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகளை அதிரடியாக செய்து வருகிறார்கள். வேலுமணி வீடுகளை தவிர, அவரது ஆதரவாளர் வீடுகளிலும், கோவை சுகுணாபுரத்தில் உள்ள வீட்டிலும் இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது.. இன்று முழுவதும் இந்த சோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.