தென்தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை...4 நாட்களுக்கு நீடிக்குமாம் - சென்னை வெயில்தான்
தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றைய தினம் தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே வெயில் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்த தொடங்கிவிட்டது.
வேலூரில் ஏற்கனவே அதிகபட்சமாக 103.3 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் நேற்று 103.2 டிகிரியும், திருத்தணியில் 102 டிகிரியாகவும் வெயில் கொளுத்தியது. அதேபோல் திருச்சி, கரூர் ஆகிய இடங்களில் வெயில் ஏற்கனவே 100 டிகிரியை தாண்டிவிட்டது. சென்னையிலும் வெயில் அதிகமாக கொளுத்துகிறது.
ஆங்காங்கே மழையும் பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் ராதாபுரத்தில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. நிலக்கோட்டை, சூரலக்கோடு, வால்பாறையில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. ஒட்டன்சத்திரம் விருதுநகர், வத்திராயிருப்பு நாங்குநேரியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை! இன்றும், நாளையும் இடி, மின்னலுடன்.. மழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு
தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தென்தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்கள்
நாளைய தினம் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
லேசான மழைக்கு வாய்ப்பு
22ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23ஆம் தேதியன்று கன்னியாகுமாரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.