அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது.
Recommended Video
இந்நிலையில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் இடங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி அடுத்த 24 மணிநேரத்திற்கு, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம்
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி
குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
நவம்பர் 27
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, தூத்துக்குடி ராமதநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, கடலூர் புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 28
நவம்பர் 28ம் தேதியன்று வடகடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை மையம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
நவம்பர் 29
நவம்பர் 29ம் தேதியன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ள வானிலை மையம், புதுச்சேரி காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
நவம்பர் 30
நவம்பர் 30ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் புதுவை, காரைக்காலில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1
டிசம்பர் 1ம் தேதியன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், புதுவை, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்
அடுத்த 5 நாட்களுக்கு குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழக கடலோர பகுதிகள், தெற்கு அந்தமான், மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சம் ஆவடியில் 20 செமீ
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஆவடி 20, செங்கல்பட்டு, செய்யூர் தலா 18, கட்டப்பாக்கம் 17, திருக்கழுக்குன்றம் 16, மதுராந்தகம், சோழவரம், பரங்கிப்பேட்டை தலா 15 செமீ மழை பதிவாகி உள்ளது.