எம்ஜிஆர். பாணியில் 'திண்டுக்கல்' அல்லது திண்டுக்கல் மாவட்ட தொகுதியை தேர்ந்தெடுப்பார்களா கமல், ரஜினி?
சென்னை: அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். மறைந்து 33 ஆண்டுகளாகிவிட்ட பின்னரும் இப்போது தமிழக அரசியல் களம் அவரை சுற்றி சுற்றியேதான் வருகிறது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் நடைபெறும் முதல் தேர்தல். இதுவரையில் இல்லாத வகையில் சினிமா நட்சத்திரங்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தேர்தல் களத்துக்கு வருகின்றனர்.
ரஜினிகாந்துக்கு முன்னரே மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தேர்தல் பிரசாரம் வரை சென்றுவிட்டார் கமல்ஹாசன். தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பிரசாரம் செய்த கமல்ஹாசன், தன்னை எம்.ஜி.ஆரின் வாரிசு என அடையாளப்படுத்த முயல்கிறார்.
நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் சிக்கிய ரூ170 கோடி- காண்ட்ராக்டரின் 'பிக்பாஸ்' யார்?: கமல்ஹாசன்
எம்ஜிஆரும் கமலும்
சினிமா சூட்டிங் காலங்களில் எம்.ஜி.ஆரின் மடியில் குழந்தை நட்சத்திரமாக உட்கார்ந்திருந்ததை சுட்டிக்காட்டி எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவன் என்கிறார் கமல்ஹாசன். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்த போது ரஜினிகாந்தாவது ஆர்.எம்.வீரப்பன் படங்களில் நடித்ததால் அரசியலுக்கு வருவாரோ? என பேசப்பட்டதும் உண்டு. ஆனால் கமல்ஹாசன் 'கலைஞானி'யாகவே அரசியலில் இருந்து ஒதுங்கி மவுனியாகத்தான் இருந்தார்.
எம்ஜிஆரின் திடீர் பக்தர்
எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்த போதே தன்னுடைய கலை உலக வாரிசு என பாக்யராஜைத்தான் அறிவித்தார். அந்த இடத்தை கூட எம்ஜிஆர், கமல்ஹாசனுக்கு தரவில்லை. ஆனால் திடீரென எம்.ஜி.ஆர்.-ன் தீவிர பக்தராகிவிட்டார் கமல்ஹாசன்.
ரஜினியும் எம்ஜிஆரும்
இதற்குதான் அதிமுக, அமமுக ஆகியவை கடுமையாக கமல்ஹாசனை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆருடன் முட்டல் மோதல் அடி உதை என்றெல்லாம் பேசப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், தாம் எம்ஜிஆரைப் போல நல்லாட்சியை தரப்போகிறேன் என்கிறார்.
எந்த தொகுதியில் போட்டி?
இப்படி எம்.ஜி.ஆரின் திடீர் பக்தர்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இப்போது எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள்? என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இருவரும் எங்க நின்றால் எளிதாக ஜெயிக்க முடியும் என்கிற தோதான பார்முலாவைத்தான் பார்க்கிறார்கள். ஏன் இவர்கள் எம்.ஜி.ஆர். பார்முலாவைப் பின்பற்றக் கூடாது? என்பதும் ஒரு கேள்வி.
எம்ஜிஆர் திண்டுக்கல்
1973-ல் திண்டுக்கல் இடைத்தேர்தல்தான் எம்.ஜி.ஆரின் அரசியல் வரலாற்றிலும் அதிமுகவின் வரலாற்றிலும் மிக முக்கியமானது. திமுக எனும் மாபெரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒரே ஆண்டில் எம்.ஜி.ஆர். சந்தித்த முதல் இடைத்தேர்தல். இந்த தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் அமோக வாக்குகளை அள்ளினார். இந்த தேர்தலில்தான் அதிமுகவின் உயிர்நாடியான இரட்டை இலை சின்னமும் அறிமுகமானது.
ரஜினி, கமல், திண்டுக்கல்
அப்படி எம்.ஜி.ஆருக்கு திருப்புமுனை தந்த திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் சட்டசபை தொகுதியையோ அல்லது திண்டுக்கல் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியையோ கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்த் தேர்ந்தெடுத்து போட்டியிடுவார்களா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. அனேகமாக, கமல்ஹாசனுக்கும் ரஜினிகாந்துக்கும் ரசிகர் மன்றங்கள் அதிகமாக இல்லாத கிராமங்கள் நிறைந்த மாவட்டம் திண்டுக்கல் என்று கூடசொல்லலாம். அப்படியான கடினமான சூழலில் ஒரு சவாலுக்கேனும் எம்ஜிஆர் பாணியில் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் திண்டுக்கல் அல்லது திண்டுக்கல் மாவட்ட சட்டசபை தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிட்டு வெற்றி பெறுவார்களா? அப்படி அவர்கள் வென்றுவிட்டால் நிச்சயம் இன்னொரு எம்.ஜி.ஆர்.தான் என்பதில் சந்தேகமும் வராது!