மகிழ்ச்சிக்கு நபி நாயகம் வழியே சரி.. வாழ்த்திய ராமதாஸ்! ஒற்றுமை ஏற்படுத்தியவர் என அன்புமணி புகழாரம்
சென்னை: இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மீலாது நபி வாழ்த்தை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம். உலகம் முழுவதும் சகோதரத்துவம் தழைக்கவேண்டும் என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வந்தவர்.
நபிகள் குறித்து சர்ச்சை; பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏவுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
நபி வழியில் நடக்க வேண்டும்
உண்மையின் வடிவமாக திகழ்ந்தவர். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபிகள். எத்தகைய தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ, அதன்படியே நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டினார். நபிகள் நாயகத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரியத் தொண்டு அவர் வழி நடப்பது தான்.
அன்பு
இன்னா செய்தாருக்கும் நன்னயமே செய்து விடுங்கள்; அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இருப்பதில் ஒரு பங்கை இல்லாதவர்களுக்கு கொடுத்து இன்பம் தேடுங்கள் என்பது தான் நபிகள் காட்டும் வழியாகும். உலகில் மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவற்றை எளிதாக ஏற்படுத்த நபிகள் காட்டும் வழி தான் உன்னத வழியாகும்.
சகோதரத்துவம்
இந்த உண்மையை உணர்ந்து உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
அன்புமணி வாழ்த்து
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அற்புதங்களை நிகழ்த்திய இஸ்லாமியர்களின் வழிகாட்டி முகமது நபியின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வறுமையிலும் செம்மை
ஆறு வயதில் தாயை இழந்த நபிகள் தமது இளம் வயதில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்தார். நாற்பது வயதில் இறைத்தூதுகளை பெறத் தொடங்கிய அவர், அடுத்த 23 ஆண்டுகளுக்கு அற்புதங்களை நிகழ்த்தினார். வறுமையிலும் அவர் செம்மையாகவும், தூய்மையாகவும், அழுக்காறு இன்றியும், உண்மை மட்டுமே உரைத்தும், எவரிடத்தும் கோபம் கொள்ளாமலும், பேராசையின்றியும், அன்பு செலுத்தியும் வாழ்ந்தார்.
வரலாறான வாழ்க்கை
அதனால் தான் அவரது வாழ்க்கை வரலாறாக மாறியிருக்கிறது. உலகில் உள்ள அனைவரும் பின்பற்றத்தக்க உன்னதமான பாடமாக இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைப் போற்றப்படுகிறது. நபிகள் நாயகம் நேர்மையின் திருவுருவமாக திகழ்ந்தார்; மக்கள் நலனுக்காக தம்மை வருத்திக் கொண்டு வழிபாடுகளை நடத்தினார்.
குரானின் பாடங்கள்
இறை நம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண் சிசுவதைக்குத் தடை என்ற குரானின் பாடங்களை இஸ்லாமியர்களுக்கு நபிகள் நாயகம் போதித்தார். மதங்கள் மக்களை இணைக்க வேண்டும்... பிரிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
ஒற்றுமையை ஏற்படுத்தியவர்
யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தினார். அவர் போதித்த பாடங்களை கடைபிடிப்பது தான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும். அதன்படி அவரது போதனைகளை பின்பற்றி ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதி, வளம், மகிழ்ச்சி, ஒற்றுமை நிறைந்ததாக மாற்ற இந்நாளில் உறுதியேற்போம்." என்று வாழ்த்தியுள்ளார்.