ஸ்கூல் பசங்க நாக்கில் “கூல் லிப்”.. அன்றே சொன்ன எடப்பாடி! பதிலளிப்பாரா ஸ்டாலின் - ஆர்பி உதயகுமார்
சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் தங்கு தடையின்றி நடமாடுவதை கட்டுப்படுத்திட விடியா திமுக அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பி இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பெற்றோர்கள் பிள்ளைகளை, கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதற்கே அஞ்சும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தெரிவித்து உள்ள தமிழ்நாடு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், "தாய்த் தமிழ்நாட்டில் இன்றைக்கு நாம் எண்ணிப் பார்க்கிறோம், பல்வேறு சம்பவங்கள் நம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதில் தென்காசி அருகே பாவூர்சத்திரத்தில் ஒரு சிறுவனுக்கு கூல் லிப் என்ற பாக்கு போன்ற நாக்கின் அடியில் வைத்துக் கொள்ளக்கூடிய போதை பொருட்களை, 16 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் கொடுத்து அதை வீடியோ மூலம் வெளிவந்தது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

போதை பொருள்
பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து சாக்லேட் வடிவிலும், போதை பொருள் விற்பனை செய்வது இப்போது தமிழகம் எங்கும் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே 16 கிலோ கஞ்சா சாக்லேட்டுடன் இளைஞர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு இருப்பது, இன்றைக்கு போதை பொருள் நடமாட்டம் தமிழகத்தில் சர்வசாதாரணமாக இருக்கிறது என்பதற்கு இது சாட்சியாக காட்சியளிக்கிறது.

பெயர் அளவில் சோதனை
போதைப் பொருளை கட்டுப்படுத்த வேண்டும், நடமாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கோவையில் கல்லூரியில் பேசி இருக்கிறார். இன்றைக்கு அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறோம். ஆனாலும் போதைப் பொருள்களை தடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் தமிழகத்தில் கஞ்சா வேட்டை 1.0, கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் பெரிய அளவிலே சோதனைகள் நடத்தப்பட்டன.

டிஜிபி அறிவிப்பு
இதில் 22,852 கிலோ கஞ்சா பிடிபட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டது. 11,964 பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டது. 6,323 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 482 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன. தற்போது கடந்த சில நாட்களாக ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கை முடித்து விடப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் அறிவித்துள்ள செய்தியும் நாம் அறிந்த ஒன்று.

அன்றே சொன்ன எடப்பாடி
ஆனால் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் காவல்துறை மானிய கோரிக்கையின்போது இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக, தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்திருக்கும் காரணத்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதை கவலையோடு எடுத்து வைத்தார். ஆனால் அதை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள தவறியதின் காரணமாகவே, ரூ.160 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கைப்பற்றினர்.

வெட்ட வெளிச்சமான போதை பொருள்
இது குறித்து இன்று எடப்பாடியார், மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்களே, சென்னை முதல் ராமநாதபுரம் வரை அத்தனை சோதனை சாவடிகளையும், கடந்து இந்த போதை பொருள் கொண்டு செல்லப்பட்டது எப்படி? என்று அரசுக்கு முன்வைத்த கேள்விக்கு இதுவரை மவுனம் சாதிக்கிறது. வாய் திறந்து பதில் கூறுவதற்கு இன்றைய அரசு தயாராக இல்லை. ஏன் என்று சொன்னால், போதை பொருள் நடமாட்டம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுவது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

எல்லோருக்கு பாதிப்பு
மத்திய புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று சொன்னால், தமிழகத்தில் இருக்கக்கூடிய காவல்துறை நடவடிக்கை என்ன என்பதுதான் தமிழக மக்களுடைய கேள்வியாக இருக்கிறது. இந்த போதை பொருளால் பயன்படுத்துவர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவரை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவரைச் சார்ந்திருக்கிற அந்த ஒட்டுமொத்த சமுதாயமும் பாதிக்கப்படும் என்பதனால் தான், இதில் அரசு மிகஎச்சரிக்கையோடு கையாள வேண்டும், கண்காணிக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தொடர்ந்து எடப்பாடியார் வலியுறுத்தி வருகிறார்.

வழிகளை அடைக்க வேண்டும்
முதலமைச்சர் கல்லூரி விழாவிலே பேசியதை நான் இங்கே நினைவு கூறுகிறேன். போதை பழக்கத்துக்கு ஒரு சிலர் அடிமையாவது கவலையாக உள்ளது என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். இன்றைய கோரிக்கை என்ன போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும், பெரும் பெரும் புள்ளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களை முடக்குடுவதுடன், போதைப் பொருட்கள் உள்ளே நுழையும் எல்லா வழிகளையும் அடைக்க வேண்டும்.

அரசின் கடமை
மாணவர்களும் இளைஞர்களும் இளைய சமுதாயமும் காப்பாற்றப்பட வேண்டும். மாணவர்கள் இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்பதில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி இந்த அரசுக்கும் கடமை இருக்கிறது. ஒரு பொறுப்புள்ள இளைய சமுதாயத்தை உருவாக்குவதற்காக, ஒரு நாட்டுப்பற்று உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக, தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் மண் என்று இந்த மண்ணை நேசிக்கிற இளைய சமுதாயத்தை, விளையாட்டு துறை, கல்வித்துறை என பல்வேறு துறையில் சாதனை படைப்பதற்கு இளைய சமுதாயத்தை வார்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பெற்றோர்கள் ஆசிரியர்களோடு முடிந்துவிடவில்லை. இதில் அரசுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

சாக்லெட் போதை பொருள்
பள்ளிக்கூடத்திற்கும், கல்லூரிக்கும் மிகப்பெரிய கனவுகளோடு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள். ஆனால், அந்த பள்ளி கல்லூரி சாலையில் அருகிலேயே இந்த போதைப்பொருள் நடமாட்டம். சாக்லேட் போதை பொருள் விற்பனை நடத்திய வேதனையின் உச்சமாக உள்ளது. இந்த அரசுக்கு இருக்கிற பொறுப்பை உணர்ந்திருக்கிறார்களா என்பதுதான் மக்களுடைய கேள்வியாக இருக்கிறது.

பெற்றோர்கள் அச்சம்
பெற்றோர்கள் கல்வி சாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கு அச்சப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கோயில்களுக்கு பக்கத்திலே போதை பொருள் நடமாட்டம் என்று சொன்னால் வேதனையின் உச்சமல்லவா? கல்வி சார்ந்த சமுதாயத்தை உருவாக்குகிற கல்வி சாலைக்கு பக்கத்தில் அந்த இளைய சமுதாயத்தை சீரழிக்கிற போதைப் பொருள் நடமாட்டம் இருக்கிறது என்கிற செய்தி நமக்கு வேதனை அளிக்கிறது அல்லவா?

ஸ்டாலின் பதில் சொல்வாரா?
இன்றைக்கு பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது? இந்த குற்றங்களுக்கு எல்லாம் அடித்தளமாக இந்த போதைப் பொருள் நடமாட்டம் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அரசு போர்க்கால அடிப்படையில் இரும்புக்கரம் கொண்டு, போதை பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்தி இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு முன்வருமா? என எடப்பாடியார் எடுத்து வைத்த கேள்விக்கு முதலமைச்சர் எப்போது வாய் திறப்பார்?" என்றார்.












Click it and Unblock the Notifications