தமிழக பாஜகவில் இரட்டை தலைமை? எல்.முருகனுக்கு தனி அறை ஏன்? அண்ணாமலையின் பரபர விளக்கம்!
சென்னை: தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
மத்திய இணையமைச்சராக எல்.முருகன் பதவியேற்ற பின்னர், தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அந்த பொறுப்புக்கு பாஜக தலைமையால் நியமிக்கப்பட்டார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர், நாளொரு பேட்டி, அமைச்சர்கள் மீது பொழுதொரு குற்றச்சாட்டு என்று ஊடகங்களில் பேசி வருகிறார்.
தமிழக அரசுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் அண்ணாமலை, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நாசர் ஆகியோருடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். அமைச்சர்கள் மீது அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் பெரியளவில் எடுபடவில்லை என்று பார்க்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி நகைக்கடை கொள்ளை: ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் - புனேவைச் சேர்ந்த 3 பேர் கைது!
அண்ணாமலை மீது புகார்?
இதுமட்டுமல்லாமல் பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர், சீனியர் நிர்வாகிகளை ஓரம்கட்டிவிட்டு, தான் மட்டுமே லைம்லைட்டில் இருக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாக பாஜக கட்சியினரிடையே பேசப்பட்டது. தான் சொல்லும் கருத்துக்கு உடன்பட்டு வரவில்லை என்றால், சீனியர்கள் பலரும் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்படுவதாக கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவற்றில் அவர் தனித்து முடிவெடுப்பதாக கட்சியின் மத்திய தலைமைக்குப் புகார் சென்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்.முருகனுக்கு தனி அறை
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனுக்கு கமலாலயத்தில் மீண்டும் தனி அலுவலகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தனி அறை திறப்பு பூஜையில் அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கும் போது, கமலாலயத்தில் எல்.முருகனுக்கு அறை கொடுக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் இருந்த அறை தற்போது எல்.முருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எல்.முருகன் செயல்பாடு
இதுமட்டுமல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது முதல்வர் ஸ்டாலின் மீதான விமர்சனம், பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக எல்.முருகன் தென்காசி சென்ற விவகாரம் ஆகியவை, அண்ணாமலை ஓரம்கட்டப்படுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியது. இதனால் பாஜகவில் இரட்டைத் தலைமை உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வியும் கட்சியினரிடையே எழுந்துள்ளது.
அண்ணாமலை விளக்கம்
இந்த நிலையில் கமலாலயத்தில் எல்.முருகனுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது குறித்து அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மக்களின் குறைகளைக் கேட்டு தீர்த்து வைப்பதற்கான முகாமுக்காக தான் கமலாலயத்தில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் வரும் காலங்களில் அண்ணாமலை, எல்.முருகனுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.