வாக்குப்பதிவில் பெரிய அடி வாங்கிய 4 மாவட்டங்கள்! தென் தமிழகத்தில் ஓட்டுப்பதிவு குறைய காரணம் இதுதானா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக அதிகரித்துள்ளது. அதேசமயம், சில தென் மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இதற்கு காரணம், சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததுதான் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த முறை ஏராளமானோர் ஓட்டுப்போட ஆர்வமாக இருந்தனர். அதனால், நேற்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமானோர் கிளம்பினர். ஆனால், போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பலர் திரும்பிச் சென்றனர்.

சென்னையில் அல்லல்பட்ட வாக்காளர்கள்
மேலும் ஏராளமானோர் அதிகாலை வரை காத்திருந்தும் பேருந்துகள் இல்லாத காரணத்தினால் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமரசம் செய்துவைத்த அதிகாரிகள் மாற்று ஏற்பாடாக பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர். ஒரு வழியாக பேருந்து கிடைத்துவிட்டது என பயணிகள் ஏறி பயணத்தை துவங்கினர். ஆனால், பல மாவட்டங்களில் இருந்து பேருந்துகள், கார்கள், தனியார் வாகனங்கள், டூவீலர்களில் ஏராளமானோர் பயணிக்க துவங்கினர்.
இதன் காரணமாக பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையை விட்டு வெளியேறவே பல மணி நேரம் ஆனது. அந்தளவுக்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதனை தாண்டி வந்தாலும் வழியில் உள்ள முக்கிய நகரங்களிலும் இதேநிலை காணப்பட்டது. நேற்று மாலை சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கிளம்பியவர்கள், போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாக்குப்பதிவு முடியும் நேரம் வரை சொந்த ஊர் செல்ல முடியவில்லை.
தென் மாவட்ட வாக்காளர்கள் தவிப்பு
தமிழகம் முழுவதும் இன்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. ஆனால், தென் மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது. சொந்த ஊர் திரும்புவதில் ஏற்பட்ட கால தாமதமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பேருந்துகள் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் ஊருக்குச் செல்ல திட்டமிட்டும் செல்ல முடியவில்லை.
வாக்களிக்க சொந்த ஊர்களுக்குக் கிளம்பிய பலரும், வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகே தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளனர். இதனால், வாக்களிக்க முடியவில்லை. ஏராளமானோர், ஓட்டுப்போட முடியாத நிலை குறித்து தங்களது கவலைகளை சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு குறைந்தது ஏன்?
கரூர், தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் 90%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 33 மாவட்டங்களில் 80%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. எனினும், தென் மாவட்டங்களில் பலவற்றில் குறைவான வாக்குப்பதிவே நடந்துள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 80%க்கும் குறைவான வாக்குப்பதிவே நடந்துள்ளது. மதுரை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் குறைவான வாக்குப்பதிவே நடந்துள்ளது. பேருந்து பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவே தென் மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
வாக்குப்பதிவில் கடைசி இடங்களை பெற்ற மாவட்டங்கள்
திருநெல்வேலி - 77.93%
ராமநாதபுரம் - 77.03%
சிவகங்கை - 76.65%
கன்னியாகுமரி - 75.61%













Click it and Unblock the Notifications