அண்ணாமலையின் அடுத்தமூவ்.. பாஜகவில் உதயமான 13 புதிய மாவட்டங்கள்.. தலைவர்கள் நியமனம்..வெளியான பட்டியல்
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழக பாஜக சார்பில் 6 மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு 13 மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜகவை செல்வாக்கை உயர்த்தி கால் ஊன்ற தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதற்கான நடவடிக்கைகளில் பாஜக மேலிடம், பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பிற நிர்வாகிகள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர்.
குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக ஆளும் திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார். அதிமுக பிளவுப்பட்டு உள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சி போல் பாஜக செயல்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு குறி
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மனதில் வைத்து இவ்வாறு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாநிலத்தில் கட்சி கட்டமைப்புகளை மாற்றம் செய்வது, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது உள்ளிட்ட பணிகளை மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார்.

மாவட்ட தலைவர்கள் மாற்றம்
தமிழகத்தில் பாஜகவில் அமைப்பு சார்ந்து மொத்தம் 60 மாவட்டங்கள் இருந்தன. சமீபத்தில் 20க்கும் அதிகமான மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதாவது உள்ளாட்சி தேர்தலில் சரியாக செயல்படாத தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் பாஜக அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களை மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.

மாவட்டங்கள் புனரமைப்பு
அதன்படி தற்போது பாஜக கட்சி சார்பில் சில மாவட்டங்கள் மறுசீரமைப்புடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக உருவான மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக பாஜக சார்பில் இன்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

6 மாவட்டங்கள் மறுசீரமைப்பு
தமிழக பாஜக சார்பில் 6 மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு 13 புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இம்மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்படுகின்றனர் என அண்ணாமலை அந்த அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, நாமக்கல் மாவட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்ட நிலவரம்
அதன்படி நாங்குநேரி, ராதாபுரம் சட்டசபை தொகுதியை உள்ளடக்கி திருநெல்வேலி தெற்கு மாவட்ட உதயமாகி உள்ளது. இதன் தலைவராக எஸ்பி தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி திருநெல்வேலி வடக்கு மாவட்டம் செயல்படும். இதன் தலைவராக தயாசங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட நிலவரம்
மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை சென்ட்ரல், மதுரை மேற்கு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி மதுரை நகர் மாவட்டம் இயங்கும். இதன் தலைவராக சுசீந்திரன் செயல்படுவார். மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி) தொகுதிகளை உள்ளடக்கி மதுரை கிழக்கு மாவட்டம் இயங்கும். இதன் தலைவர் ராஜசிம்மன் செயல்படுவார். திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி சட்டசபை தொகுதிகளுடன் மதுரை மேற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக சசிக்குமார் செயல்பட உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட நிலவரம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்துக்குள் திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி சட்டசபை தொகுதிகள் உள்ளது. இதன் தலைவராக செல்வம் அழகப்பன் செயல்பட உள்ளார். கந்தர்வ கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை தொகுதிகளை உள்ளடக்கி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் செயல்படும். இதன் தலைவராக விஜயகுமார் செயல்படுவார்.

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்
விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிகளுடன் விழுப்புரம் தெற்கு மாவட்டம் இயங்கும். இதன் தலைவராக கலிவரதன் செயல்படுவார். விழுப்புரம் வடக்கு மாவட்டத்துக்குள் செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர் (தனி) சட்டசபை தொகுதிகள் வரும். இதன் தலைவராக ராஜேந்திரன் செயல்படுவார்.

செங்கல்பட்டு மாவட்ட நிலவரம்
செங்கல்பட்டு தெற்கு மாவட்டமாக செங்கல்பட்டு, திருப்போூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி) சட்டசபை தொகுதிகள் செயல்படும். இதன் தலைவராக மோகனராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு வடக்கு மாவட்டமாக சோழிங்கநல்லூர் (பரங்கிமலை கிழக்கு, மேற்கு மண்டல்கள்), ஆலந்தூர் (கண்டோன்மென்ட் மண்டல்), பல்லாவரம், தாம்பரம் சட்டசபை தொகுதிகள் செயல்படும். தலைவராக வேதசுப்பிரமணியம் செயல்படுவார்.

நாமக்கல் மாவட்ட நிலவரம்
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேர்ந்தமங்கலம் (தனி), நாமக்கல் சட்டசபை தொகுதிகள் அடங்கும். தலைவராக சத்தியமூர்த்தி செயல்படுவார். நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவராக ராஜேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த மாவட்டத்துக்குள் பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டசபை தொகுதிகள் வரும்'' என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications