மோதுவதற்கு முன்பே ரயில் தடம்புரண்டதா? பாயிண்ட் இண்டிகேட்டர் பிரச்சனை? மூத்த ரயில்வே அதிகாரி பரபர!
சென்னை: பாயிண்ட் இண்டிகேஷன் மெஷின் உடைந்ததால் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில், மெயின் லைனில் இருந்து மாறி லூப் லைனில் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதற்கு முன்பாகவே பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் லேசாக தடம்புரண்டிருக்கலாம் என ஓய்வுபெற்ற ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பாக கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் பதிவான சிக்னல் தரவுகள் அடிப்படையில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். லேசாக தடம் புரண்டதன் காரணமாகவே பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில், லூப் லைனுக்குள் நுழைந்திருக்கலாம் என ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் நேற்று காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் நேற்று இரவு 8.27 மணி அளவில், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. மேலும் ரயிலின் பார்சல் பெட்டியில் அடிப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீஸார், ஆர்.பி,எஃப். போலீசார், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 பயணிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கவரைப்பேட்டை அருகே திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பயணிகளை பேருந்துகள் மூலமாக, பொன்னேரி நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து இரண்டு மின்சார ரயில்கள் மூலமாக சென்ட்ரலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து, சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை இந்த பயணிகள் சிறப்பு ரயிலில் தர்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 உயரதிகாரிகளை கொண்ட குழுவை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது. இதில் இயந்திரவியல், இயக்கவியல், தண்டவாள பராமரிப்பு துறை, சிக்னல் மற்றும் தொலைதொடர்பு, ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஆகிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
விபத்துக்கு சிக்னல் தொழில்நுட்ப பிரச்னையா அல்லது மனித தவறா, வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க உள்ளனர். மேலும், ரயில்வே போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் ஓய்வுபெற்ற மூத்த ரயில்வே அதிகாரி, இந்த விபத்து குறித்து தனது பார்வையை முன்வைத்துள்ளார்.
சிக்னலிலும் பிரச்சனை இல்லை, பாயிண்ட் இண்டிகேஷனிலும் பிரச்சனை இல்லை. அதற்கு முன்பாக ஏதோ சிறு தவறு நடந்துள்ளது. சிக்னலுக்கு வருவதற்கு முன்பே ரயில் லேசாக தடம் புரண்டு இருக்கலாம், அல்லது டிராக் ஃபெயிலியராக இருக்கலாம். அதன் காரணமாகவே பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில், லூப் லைனுக்குள் நுழைந்திருக்கலாம் என ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications