ஏழை மக்களும் எளிதில் வீடு கட்டலாம்...ஒரு யூனிட் மணலின் விலை ரூ.1000 - தமிழக அரசு அதிரடி
ஒரு யூனிட் ஆற்று மணலின் விலையை ரூ. 1000ஆக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஒரு யூனிட் ஆற்று மணலின் அடிப்படை விலையை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்தும் ஆற்று மணல் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விற்பனைக்கு ஆற்றுமணல் விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு ஆற்று மணலின் அடிப்படை விலையை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆற்றுமணலை பெற இணையதளத்தில் விண்ணப்பித்து தொகையும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

எளிமையான முறை
பொதுமக்கள்,ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் கட்டடமற்ற எவ்வித இதரபணிகளை மற்றும் எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

புதிய முறையில் மணல் விற்பனை
தமிழகத்தில் ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்து,வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை செயல்படுத்தும் வகையிலும்,பொதுமக்கள், ஏழை எளியோர் பயன்பெறும் வகையிலும் புதிய வழிமுறைகளை கடைப்பிடித்து மணல் விற்பனை செய்யுமாறு ஆணையிட்டுள்ளார்கள்.

ஆன்லைன் விண்ணப்பம்
அதன்படி,பொதுமக்கள்,ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.00 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும்.

நெட் பேங்கிங்
தற்பொழுது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தற்பொழுது உள்ள தகவல் தொழில்நுட்ப புதிய வழிகாட்டுதல்களுடன் மணல் விற்பனை எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசு மணல் கிடங்குகளில்,கூடுதலாக செயல்படவுள்ள வங்கிகளில் கவுண்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக் கொள்ளலாம். இவ்வசதியை தற்போது நடைமுறையிலுள்ள Net Banking, Debit Card மற்றும் UPI ஆகிய Online வழியாகவும் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அரசாணை வெளியீடு
இந்நிலையில்,ஒரு யூனிட் ஆற்று மணலின் விலையை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆற்றுப்படுகையிலிருந்து மணல் எடுத்து மக்களுக்கு விற்க முடிவு செய்து வழிமுறைகள் வெளியிடப்பட்ட நிலையில்,அரசு இத்தகைய உத்தரவினை பிறப்பித்துள்ளது. மேலும்,முறைகேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் ஆற்று மணல் விற்பனை கண்காணிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications