அடங்காத சிடி மணி.. சப் இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச் சூடு.. அதிர்ந்து போன சென்னை
சென்னை: ரவுடி சி.டி மணி துப்பாக்கியால் சுட்டதில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் காயமடைந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிடி மணி. இவர் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளில் சிடி விற்பனை செய்து வந்ததால் சிடி மணி என்று அழைக்கப்பட்டார்.
நாளடைவில் அவர் சிலருடன் கைகோர்த்து கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.

வழக்குகள் நிலுவை
6 கொலை வழக்குகள், 15 கொலை முயற்சி வழக்குகள், துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு உட்பட அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

நேற்று இரவு கைது
தென் சென்னையில் பிரபல ரவுடியான சிடி மணி தொடர்ந்து தலைமறைவாக இருந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதால், அவரை பிடிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில்தான், நேற்று இரவு சென்னையில் வைத்து ரவுடி சிடி மணியை போலீஸார் கைது செய்தனர்.

போலீசை சுட்ட ரவுடி
அதன் பிறகு சிடி மணியை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், நேற்று ரவுடி சிடி மணியை பிடித்துச் சென்றபோது, போலீஸ் தனிப்படை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனை அந்த ரவுடி துப்பாக்கியால் சுட்ட தகவல் இன்று மாலை வெளியானது.

சிகிச்சை
துப்பாக்கியால் சுடப்பட்ட உதவி ஆய்வாளர் காயமடைந்த நிலையில், அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது புகைப்படங்கள் "ஒன் இந்தியா தமிழுக்கு" கிடைத்துள்ளன.

தீவிர கண்காணிப்பு
ஏற்கனவே ஐந்து முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டிருக்கும் சிடி மணி போலீஸ் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அவர் தப்பியோடி விடக் கூடாது என்பதால் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications