ரூ.1000 வந்துருச்சா.. மகளிர் உரிமைத் தொகையை அட்வான்சாக கொடுத்த தமிழக அரசு! பொங்கலுக்கு டபுள் ஹேப்பி
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 இன்று முன் கூட்டியே பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. 3 கட்டங்களாக மாநிலம் முழுவதும் விண்ணப்ப முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது பெறப்பட்ட விண்ணப்பங்கள் அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களில் இருக்கும் தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டு பின்னர் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்படி விபரங்கள் சரிபார்க்கப்பட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் முதல் கட்ட பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்ப முடிவு நிலை குறித்த மெசேஜ் விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மெசேஜ் வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது.
30 நாட்களுக்குள் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் தீர்வு கிடைக்கும் என அரசு அறிவித்தது. அதன்படி மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை பெற மேலும் ஆயிரக்கணக்கான குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். உரிமைத் தொகை பெற்றவர்களில் இறந்தவர்கள் மற்றும் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்ட பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, கள ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்களில் இருக்கும் குடும்பத் தலைவிகளின் விபரங்கள் உறுதி செய்யப்பட்டு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
மாதந்தோறும் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், பண்டிகை அல்லது வார விடுமுறை காலத்தில் முன்கூட்டியே உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசு பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து வருகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போதும் ஏழை எளிய மக்கள் தீபாவளிக்காக செலவு செய்வதற்கு முன் கூட்டியே மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்க உள்ள நிலையில், கூடுதல் மகிழ்ச்சி தரும் வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் முன்னதாக இன்றே மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications