ஆர்கானிக் விவசாயத்திற்கு ரூ.26 கோடி..இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் விருது..ரூ.5 லட்சம் பரிசு
இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது, ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது, ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியள்ளார்.
தமிழக சட்டசபையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர்.

தமிழ்நாடு அரசால் ரூ.1695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறுதானிய மண்டலங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 சிறுதானிய மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கம்பு, கேழ்வரகு நேரடியாக கொள்முதல் செய்து கல்வி நிலையங்களுக்கு வழங்கப்படும்.
கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வழங்கப்படும்
60,000 சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்புக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட்டார அளவில் விவசாயிகள் தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள வாட்ஸ்அப் குழு அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் கூறியுள்ளார்.
2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும். இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும். கோவை மாவட்டத்தில் கறிவேப்பிலையை அதிகரிக்க ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் பட்டதாரிகள் 200 பேரை தேர்ந்தெடுத்து புதிதாக தொழில் தொடங்க ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது, ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும், தமிழ்நாடு முழுவதும் 14,500 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள 750 தொகுப்புகள் உருவாக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications