ரூ.322 கோடி மோசடி.. லிஸ்ட் போட்டு புகார் சொல்லி.. எடப்பாடி பழனிசாமியை 'ஆப்' செய்த அமைச்சர்!
சென்னை : அதிமுக ஆட்சிக் காலத்தில் கூட்டுறவு வங்கியில் ரூ.322 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி சட்டசபையில் கூறியுள்ளார். பயிர் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்க வேண்டும் எனற எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு மேற்கண்ட பதிலை அமைச்சர் அளித்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பயிர் கட்ன் தள்ளுபடி குறித்து கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி இதுபற்றி கூறும் போது. 2016ம் ஆண்டு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 2016ல் ஆட்சி அமைந்தவுடன் 5318.73 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் 2021ம் ஆண்டு அதிமுக அரசு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
5 ஆண்டு காலத்தில் விவசாயிகளுக்கு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 17428.73 கோடி ரூபாய் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தள்ளுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பல பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில பேருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனடியாக தள்ளுபடி கடன் சான்றிதழை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

12000 கோடி தள்ளுபடி
இதற்கு பதில் அளித்து கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், "31.1.2021ல் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டு, ஏறத்தாழ ரூ.12,100 கோடி அளவுக்கு அந்த தள்ளுபடியை அவசரம் அவசரமாக அறிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, அரசாங்கம் நபார்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி தான் கொடுத்திருக்கிறார்கள். காரணம் அவர்களிடம் இருந்து பணம் வராது என்பதால். இந்த அரசு முழுவதுமாக எல்லா வங்கிகளிலும் எந்த முறையில் கடன் கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு இருக்கிற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மட்டுமல்லாமல், அனைத்து வங்கிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காரணம், நிறைய புகார்கள் வந்திருக்கிறது. இதில், 136 சங்கங்களில் கிட்டதட்ட ரூ.203 கோடி அளவுக்கும், 229 சங்கங்களில் ஏறத்தாழ 108 கோடி அளவிற்கும், அதேபோல 155 சங்கங்களில் ரூ.11 கோடி அளவுக்கும் அங்கே முறைகேடுகள் நடந்துள்ளது.

முறைகேடு
அதனால் தமிழகத்தின் அனைத்து கூட்டுறவு வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக, ரூ.12 ஆயிரம் கோடியில் சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1,350 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஆய்வு நடைபெற்று வருகிறது. அதேபோல ஈரோட்டில் ரூ.1,085 கோடி. இப்படி 12 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி என்றால், இரண்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.2,400 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

2500 கிராம் நகைகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கிட்டத்தட்ட நகை மட்டும் 44 பொட்டலம் காணவில்லை. இது 300 பவுன் நகை, அதாவது 2,500 கிராமுக்கு மேலாக மாயமாகி உள்ளது. இது மட்டுமல்ல, ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் கடன் திருப்பி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகள் குறித்து விசாரணை
இதற்கெல்லாம், 2021 வரை அதிமுக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கு ஒரு போர்டு இருக்கிறது, தலைவர் இருக்கிறார். நடவடிக்கையே இல்லை. அதனால்தான் சொல்கிறோம், எல்லா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் நகைகளும், அங்கே இருக்கக்கூடிய கடன் வழங்கிய முறையும் பரிசீலித்து பின்பு அதற்கு உரிய ரசீதுகள் வழங்க வேண்டும் என்று நாங்கள் கூட்டுறவு துறைக்கு ஆணையிட்டுள்ளோம். அந்த பரிசோதனை முடிய முடிய அனைத்து விவசாயிகளுக்கும் ரசீது வழங்கப்படும். இவ்வாறு ஐ பெரியசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications