விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்.. ரூ.4508 கோடி ஒதுக்கிய ஸ்டாலின் அரசு!
சென்னை: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க ரூ.4508 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று, வேளாண் பட்ஜெட் உரையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுமா என்ற சந்தேகங்களை மத்திய அரசின் மானிய குறைப்பு தொடர்பான நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருந்தன.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என்ற யோசனைகள் சந்தேகங்களை அதிகரித்து வந்தன.

இலவச மின்சார திட்டம்
இந்த நிலையில்தான், தமிழகத்தில், இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க ரூ.4508 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று, வேளாண் பட்ஜெட் உரையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இலவச மின்சாரம் பற்றி, மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பலமுறை பேசியுள்ளார். தனது தந்தை கருணாநிதி முதல்வராக முதல் கையெழுத்திட்ட திட்டம் என்பதால் இலவச மின்சார திட்டத்தை தொடரச் செய்வதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.

கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் அறிவிப்பு
திமுக ஆட்சியைப் பிடித்த இரண்டே ஆண்டுகளில் 1969ல் முதல்வர் அண்ணா மறைந்தார். புதிய முதல்வராகப் பதவியேற்ற கருணாநிதி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திட்டத்தை அறிவித்தார். இந்த நிலையில்தான், தற்போது அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தொடர்ந்து வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பூரிப்பு தகவல்
இதனால், இலவச மின்சாரம் தொடரும் என்ற உறுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இது விவசாயிகளுக்கு பூரிப்படைய வைக்கும் தகவல்தான். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டபோது, கைதட்டி உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

கரும்பு விவசாயிகள்
இதனிடையே, அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் மேலும் கூறுகையில், கடந்த நான்கு பருவங்களில் கரும்புக்கு எந்த ஒரு விலை உயர்வும் இல்லாமல், ஒரே விலையில் தொடர்ந்து கொள்முதல் செய்வதால் கரும்பு சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்து விட்டது. இது குறித்து தொடர்ந்து கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வருகின்றன. கரும்பு விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு 2020 -2021ம் ஆண்டு அரவை பருவத்தில், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு தொகையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 150 வீதம் நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது என்றார். இதன் மூலம் கரும்பு விலை டன் ஒன்றுக்கு 2,900 ரூபாய் கிடைக்கும். ஏற்கனவே 2,750 ரூபாய் விவசாயிகளுக்கு கிடைத்த நிலையில் அரசு 150 ரூபாயை கூட்டி வழங்குவதால் விவசாயிகள் பலன் பெறுவார்கள்.

விலை உயரும்
ஒரு லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாநில அரசு 138 கோடியே 83 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது முதல் வருஷம். இப்போதே கரும்பு விவசாயிகளுக்கான வருவாயை உயர்த்தியுள்ளோம். இது இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று புன்முறுவலுடன் கூறினார் அமைச்சர் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications