இது லிஸ்ட்லயே இல்லை.. ஆளுநர் டூ அரசியல்வாதி.. தமிழிசை சவுந்தரராஜன் பிளான்: ஆர்.எஸ்.பாரதி
சென்னை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆசை இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
இதனால் தான் தமிழ்நாட்டில் தன் அரசியல் நிலைப்பாட்டைத் தக்க வைக்க தவறான பேட்டிகளைக் கொடுத்து வருவதாக விமர்சித்துள்ளார்.

"அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் கைகுலுக்கத் தெரிந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாரதியாருக்கு மரியாதை செலுத்த நேரமில்லையா" என தமிழிசை சவுந்தரராஜன் கேட்டதற்கு திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி பெயரில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும் சகோதரி, தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக,எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆசையை டெல்லி மேலிடத்திற்கு வெளிப்படுத்தும் விதமாக, தவறான பேட்டிகளைக் கொடுத்து, திராவிட முன்னேற்றக் கழக அரசைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் அதனை உறுதிபடுத்தும் வகையில் அறிக்கை விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

தமிழிசை சவுந்தரராஜனை பொறுத்தவரை கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து களம் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் தோல்வியை தழுவினாலும் கூட அவருக்கு ஆளுநர் பதவி வழங்கி கவுரவித்தது கட்சி மேலிடம்.
இந்நிலையில் அவர் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு திரும்புவாரா என்பது கேள்விக்குறிதான். இந்தச் சூழலில் தான் திமுக அமைப்புச் செயலாளர் இப்படியொரு அறிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications