ராஜ்யசபா தேர்தல்.... ஆர்வம் காட்டாத அதிமுக ஈபிஎஸ் டீம்... கச்சேரிக்கு ரெடியாகும் ஓபிஎஸ் கோஷ்டி
Recommended Video
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் யார் வேட்பாளர் என்பதை இன்னமும் முடிவு செய்யாமல் தத்தளித்து வருகிறது அதிமுக. இதற்கு காரணமே ஈபிஎஸ் அணி ஆர்வம் காட்டாததும் ஓபிஎஸ் அணியில் பலரும் தங்களுக்குதான் சீட் வேண்டும் என்றும் பிடிவாதம் காட்டுவதும்தான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
தமிழகத்தில் 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலுக்கு இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிட்டது. போட்டி ஏற்பட்டால் வரும் 18-ந் தேதி வாக்குப் பதிவு நடத்தப்படும்.
வேட்பு மனுத் தாக்கலின் முதல் நாளே திமுக தமது 2 வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. தொமுச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறது திமுக. மற்றொரு இடம் மதிமுகவுக்கு என ஒதுக்கிவிட்டது திமுக.
ரோகிணி எங்களுக்கு திரும்பி வர வேண்டும்.. சேலத்தை கலக்கும் போஸ்டர்கள்!
வேட்பாளர் தேர்வில் அதிமுக குழப்பம்
அதே நேரத்தில் தேர்தலில் எப்போதும் முனைப்பு காட்டும் அதிமுக இன்னமும் யார் வேட்பாளர் என்பதையே முடிவெடுக்காமல் இருக்கிறதாம். இதற்கு காரணமே ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகளாக பிரிந்திருப்பதாம்.
ஒரு வேட்பாளர் முடிவு
அதிமுகவைப் பொறுத்தவரையில் இரு அணிகளுக்கும் பொதுவானவரான தமிழ்மகன் உசேனை நிறுத்தலாம் என ஒருமனதாக முடிவெடுத்துள்ளனராம். எஞ்சிய 2 வேட்பாளர்கள் யார் என்பதில்தான் பெரும் குழப்பமே நீடிக்கிறதாம்.
ஓபிஎஸ் அணியில் யார் யார்?
ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன், கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன் என ஒரு பெரும் பட்டாளமே எம்.பி. சீட் எனக்கே என மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிறதாம், ஈபிஎஸ் அணியில் வெளிப்படையாக எங்களுக்கு வேண்டும் என கேட்காவிட்டாலும் மேற்கு மண்டல அமைச்சர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என பார்க்கலாம் என அமைதி காத்து வருகின்றனராம்.
ஈபிஎஸ் அணி நிதானம்
முதல்வர் ஈபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரையில் டெல்லிக்கு நாம் அனுப்பும் எம்.பிக்கள் எவரும் தனி ஆவர்த்தனம் செய்துவிடக் கூடாது; நமக்கு எதிராக போய்விடக் கூடாது என்பதில் மிக நுணுக்கமாக இருக்கின்றனர். அதனால் மிக மிக நிதானமாகவே காய்களை நகர்த்துகின்றராம்.
ஓபிஎஸ் அணியின் கச்சேரி
தற்போதைய நிலையில் ஓபிஎஸ் அணியினர் எவரையுமே டெல்லிக்கு அனுப்புகிற மனநிலையில் இல்லையாம் ஈபிஎஸ் முகாம். இதை கேள்விபட்ட ஓபிஎஸ் அணியின் மூத்த நிர்வாகிகள் மிகவும் கடுப்பாகி உள்ளனராம். சரி.. எங்களைவிட்டுவிட்டு யாரை தேர்ந்தெடுக்கிறார்கள் என நாங்களும் பார்க்கிறோம்..அதற்குப் பிறகு எங்க கச்சேரியை ஆரம்பிக்கிறோம் என அடுத்த தர்மயுத்தத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இதுவும் கடந்து போகும் என அசால்ட்டாக பயணிக்கிறதாம் ஈபிஎஸ் தரப்பு.