பொதுக்கூட்டங்களில் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம்... ஆதரவாளர்களுக்கு சசிகலா அட்வைஸ்..!
சென்னை: பொதுக்கூட்டங்களில் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு சசிகலா அட்வைஸ் செய்திருக்கிறார்.
சென்னை ராமாவரம் தோட்டத்தில் அதிமுக பொன்விழா துவக்கநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழி வந்த தொண்டர்கள் யாரும் பிறர் மனம் புண்படும்படி பேசமாட்டார்கள் என சசிகலா குறிப்பிட்டார்.
கழுத்தில் சங்கிலி.. கொடுமைப்படுத்தப்பட்ட 45 நாய்கள்.. கொடூர மரணம்.. சென்னை ஐஐடிக்கு எதிராக புகார்!
சசிகலா மேடையில்
சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் நடந்த அதிமுக பொன்விழா ஆண்டு துவக்க நாள் நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்ற நிலையில், அவரை மேடையில் வைத்துக்கொண்டே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., குறித்து ஒரு சில நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்தனர். அதைத் தொடர்ந்து இறுதியாக மைக் பிடித்துப் பேசிய சசிகலா, எம்.ஜி.ஆர். வழிவந்த தொண்டர்கள் அடுத்தவர்களை புண்படுத்தக் கூடாது என தாம் நினைப்பதாக தெரிவித்தார்.
தரக்குறைவாக
இதனால் இனி யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு அன்புக் கட்டளை பிறப்பித்தார் சசிகலா. எம்.ஜி.ஆர். எப்போதுமே தானும் ஒரு தொண்டன் தான் என அடிக்கடி கூறுவார் என்றும் இதனால் தொண்டர்களால் இன்று நடத்தப்பட்டுள்ள அதிமுக பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
மற்றவர்கள் தவறு
கட்சிக்கு எள் முனை அளவும் துரோகம் செய்ய தாம் நினைத்ததில்லை எனக் கூறிய சசிகலா, மற்றவர்கள் செய்யும் தவறுகளை நாமும் செய்யக்கூடாது என ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார். முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் குறித்து சசிகலா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
மதிய உணவு
அதிமுக பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக சசிகலாவுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது. அரசியல் நிகழ்வு ஒன்றில் சசிகலாவுக்கு வீரவாள் பரிசளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனிடையே ராமாவரம் தோடத்தில் உள்ள எம்.ஜி.ஆர். பள்ளி மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட சசிகலா, சிறிது நேரம் உணவும் பரிமாறினார். இதற்கான ஏற்பாடுகளை சசிகலாவின் தீவிர ஆதரவாளரான வைத்தியநாதன் செய்திருந்தார்.