சின்னம்மா வர்றாங்களா? ஓபிஎஸ் டீமில் துண்டு போட்டு வைக்கும் எடப்பாடி & கோ? என்னங்க இப்படி ஆயிருச்சு!
சென்னை : அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையேயான அதிகார மோதலில் சசிகலாவின் வருகை திடீர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக எம்ஜிஆர் பிறந்த நாளான நேற்று அவர் அளித்த பேட்டி பல கேள்விகளை எழுப்பி இருப்பதோடு சில முன்னாள் அமைச்சர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையிலான அதிகார மோதல் இடையில் தினகரனின் வருகையால் மூன்றாக கருதப்பட்டது. ஆனால் அனைவருக்கும் முன்னதாகவே நான்தான் அதிமுக பொதுச் செயலாளர் என சசிகலா நடராஜன் போர்க்கொடி தூக்கி வந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராகவும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த போதே அதிமுகவின் அனைத்து அதிகார மட்டங்களிலும் ஜெயலலிதாவுக்கு அடுத்து ஏன் ஜெயலலிதாவின் மனசாட்சியாகவே சசிகலா தான் இருந்தார் என கூறப்படுவதும் உண்டு.
கொடியில கை வச்சிட்டாங்க.. எடப்பாடி அணியினருக்கு எதிராக திரண்டு வந்த அமமுக.. ஓபிஎஸ் டீம் 'கப்சிப்’!
விகே சசிகலா
இந்த நிலையில் தான் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவால் பதவியில் அமர்த்தபட்டார். அதற்கு பிறகாக ஓ.பன்னீர்செல்வத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சில அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை பொதுச் செயலாளராக வரவேண்டும் என அழைப்பு விடுத்தனர். அதற்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் ஒருவரின் கையில் இருக்க வேண்டும் என சசிகலாவை முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என அடுத்தடுத்து கோரிக்கை விடுத்தனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்த வேண்டியது ஆயிற்று.
எடப்பாடி பழனிச்சாமி
அதற்குப் பிறகு சசிகலா சிறை சென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும் தற்போது கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் அவருக்கும் இடையிலான மோதல் அனைவரும் அறிந்ததே. இடையில் அதிமுக விவகாரங்களில் டிடிவி தினகரன் கூறி வந்த கருத்துக்கள் திடீர் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு அதிமுக விவகாரங்களில் தலையிடுவதை தினகரன் குறைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தான் மீண்டும் அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறார் சசிகலா.
பரபரப்பு பேச்சு
கடந்த காலங்களில் அதிமுகவின் பொது செயலாளர் நான் தான் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பேன் என புரட்சிப் பயணம் ஆன்மீகப் பயணம் என அடிக்கடி மேற்கொண்டு வந்தார். ஆனால் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரையும் சந்திப்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை ஒட்டி சசிகலா பேசிய பேச்சு அதிமுகவிற்குள் திடீர் புயலை கிளப்பி இருக்கிறது. எம்ஜிஆரின் பிறந்தநாளை ஒட்டி நினைவு அஞ்சலி செலுத்தியதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"அதிமுகவை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் ஆரம்பித்து இருந்தே எனது உத்தியை பார்த்துக்கொண்டு உள்ளீர்கள். இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. நடக்கும் போது நீங்களே பாருங்கள். எங்கள் கட்சிக்காரர்களை நான் பார்ப்பதில் என்ன உள்ளது. திமுகவை தோற்கடிக்க அதிமுக ஒன்றுபட வேண்டும்" என கூறினார்.
கடுப்பான ஜெயக்குமார்
இது தொடர்பாக பதில் அளித்த பன்னீர்செல்வமும் சசிகலாவின் கருத்தை ஆமோதிப்பது போலவே கூறினார். ஆனால் அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார் ஜெயக்குமார். சசிகலா அதிமுகவை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. சசிகலா ஆயிரம் கருத்து சொன்னாலும் அதை பொருட்படுத்த போவதில்லை. சசிகலா தினகரன் பன்னீர்செல்வம் இணைந்து ஒரு கட்சி ஆரம்பித்தால் நல்ல விஷயம். அதற்கு நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம். சசிகலா குரலில் பன்னீர்செல்வம் பேசுகிறார். நீங்கள் ஒன்றுபடுங்கள்" என கூறினார்.
திடீர் குழப்பம்
ஜெயக்குமாரின் பேச்சு இப்படி இருக்க தற்போது தேனி தரப்பினர் மற்றொரு தகவலை அதிமுகவுக்குள் பரப்பி வருகின்றனர். அதாவது சசிகலா முதல்வராக வேண்டும் என முதலில் போர்க்கொடி தூக்கிய சில மூத்த நிர்வாகிகள் தற்போது அவர் ஓபிஎஸ் இபிஎஸ்ஐ சந்திப்பேன் எனக் கூறியிருப்பதால் திடீர் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்களாம். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இருக்கும் ஒரு எம்பியும் தேர்தலில் தோற்ற ஒரு முன்னாள் அமைச்சரும் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று ரீ தியில் பேசி வருகிறார்களாம்.
மாஜிக்கள் குழப்பம்
மேலும் இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பை அவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தவிர கடலோர மாவட்ட முன்னாள் அமைச்சரும் சர்ச்சைக்கு பெயர் போன அமைச்சரும் தற்போது வரை சசிகலா ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்களாம். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் அவர்களுடன் பேசி உள்ளதாக தெரிகிறது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஈரோடு இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் அல்லது குறிப்பிடத் தகுந்த வாக்கு சதவீதத்தை பிடிக்க வேண்டுமானால் அதிமுக ஒன்றிணைய வேண்டியது அவசியம். ஓபிஎஸ் இபிஎஸ் இடையிலான மோதலில் தங்கள் எதிர்காலமும் பாதிக்கப்படுவதால் அவர்களும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சில மாவட்ட செயலாளர்களும் சசிகலா தரப்பில் இணைய தயாராக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முற்றிலுமாக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.