சசிகலா யாகம்.. மீண்டும் அதிமுகவில் இணைய பிளான்.. ஈஸியா சமாளிக்கலாம்.. நம்பிக்கையில் இபிஎஸ்
சென்னை: சசிகலாவின் திருச்செந்தூர் பயணம் காரணமாக அதிமுகவில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. பல்வேறு நிர்வாகிகள் சசிகலாவிற்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு முன் சசிகலா எதிர்ப்பை சமாளித்தது போலவே இதையும் சமாளிப்பார் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வியை தொடர்ந்து சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் பேச தொடங்கி உள்ளனர். தலைமை சரியில்லை. வேறு ஒரு நல்ல தலைமை இருந்தால் அதிமுக இவ்வளவு மோசமான தோல்வியை சந்தித்து இருக்காது. நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சோர்வடைந்துவிட்டனர் என்று கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு குரல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.
தென் மாவட்டங்களில் இது அதிகம் கேட்க தொடங்கி உள்ளது. சசிகலாவும் இதை பயன்படுத்திக்கொண்டு திருச்செந்தூருக்கு சென்று ஆன்மீக பூஜையில் ஈடுபட்டு இருக்கிறார். அதோடு தேனி அதிமுகவிலும் சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உள்ளே விட எதிர்ப்பு
இந்த நிலையில் சசிகலாவை அதிமுகவிற்குள் கொண்டு வர கொங்கு மண்டல நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. கோவையில் உள்ள ஒரு சில எம்எல்ஏக்களை தவிர மற்ற அனைவரும் சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க கூடாது என்று கூறி வருகிறார்களாம். சசிகலா வந்தால் அதிமுகவின் கட்டுப்பாடு நம்மை விட்டு சென்றுவிடும். கொங்கு மண்டலத்தின் லகான் நம்மை விட்டு போய் விடும். இதனால் சசிகலாவை உள்ளே விட கூடாது என்று எடப்பாடிக்கு கொங்கு மண்டல நிர்வாகிகள் வலியுறுத்தி இருக்கிறார்களாம்.

சசிகலா பிளான்
ஆனால் சசிகலாவோ தனக்கு எதிராக கொங்கு மண்டல நிர்வாகிகள் செயல்பட்டாலும் தென் மண்டலம், வடக்கு மண்டலம், டெல்டா மண்டல அதிமுகவினரை தன் பக்கம் இழுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். அதன்படி 30 எம்எல்ஏக்களை அதிமுகவில் தன் பக்கம் கொண்டு வந்து , அதிமுக சின்னதை முடக்கும் திட்டத்திலும் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு தனது பக்கத்தில் கூடுதல் எம்எல்ஏக்களை கொண்டு வந்து சின்னதிற்கு உரிமை கொண்டாட சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சியை கைப்பற்ற திட்டம்
சசிகலா பக்கமே இப்போது அதிக அளவில் நிர்வாகிகள் உள்ளனர். தொடர் கைதுகள், ரெய்டுகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எடப்பாடி பக்கம் செல்ல அதிமுக நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை . அதனால் சசிகலா பக்கம் சாய பலர் தயாராக இருக்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதை உணர்ந்தே கொங்கு மண்டல அதிமுக எம்எல்ஏக்களை வைத்து சசிகலாவிற்கு எதிராக அதிமுக உள்ளே எடப்பாடி அழுத்தம் கொடுத்து வருகிறாராம்.

விட மாட்டார்கள்
வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை வைத்து கட்சிக்குள் சசிகலாவிற்கு எதிரான அலையை மீண்டும் உருவாக்க எடப்பாடி முயன்று கொண்டு இருக்கிறாராம். ஆனாலும் சசிகலாவிற்கு முன்பு இருந்ததை போல இப்போது எதிர்ப்பு இல்லை என்கிறார்கள். தொடர் தோல்வியால் எடப்பாடி மீது பலர் நம்பிக்கை இழந்து உள்ளனர். இவர்கள் அப்படியே சசிகலா பக்கம் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் இது பூகம்பமாக வெடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

எடப்பாடி
ஆனால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு முன் சசிகலா எதிர்ப்பை சமாளித்தது போலவே இதையும் சமாளிப்பார் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. கட்சியில் சிலர் மட்டுமே சசிகலா ஆதரவாக பேசுகிறார்கள். மற்றபடி நிர்வாகிகள் யாரும் எடப்பாடி மீது நம்பிக்கை இழக்கவில்லை,. ஜெ மறைவிற்கு பின் கட்சியை வழிநடத்தியது எடப்பாடிதான். அதனால் டாப் நிர்வாகிகள் யாரும் செல்ல மாட்டார்கள். ஒரு சிலர் சசிகலாவிற்கு ஆதரவாக பேசும் நிலையில் அவர்கள் மீது ஓ ராஜா மீது எடுக்கப்பட்டது போல நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications