சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்.. சென்னை ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு பரபர வாதம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என சசிகலா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என்று ஓபிஎஸ் தரப்பினர் வாதிட்டனர்.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். சென்னை 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று, சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.
சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும், இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி வாதிட்டார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதால் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதாகவும், எம்.ஜி.ஆர். இறந்தபோது கூட இதேபோன்ற இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாகவும், கட்சியில் இருந்து நீக்கவோ, கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அவர்களுக்கு அதிகாரமில்லை என சசிகலா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை இன்றும் சென்னை ஹைகோர்ட்டில் நடைபெற்றது.
அதிமுக தரப்பு முன் வைத்த வாதத்தில், பழைய விதிகளை அடிப்படையாக கொண்டு சசிகலா வழக்கு தொடர முடியாது. அதிமுகவின் வளர்ச்சிக்காக கட்சி விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியே பொதுச்செயலாளர், கட்சி, சின்னம் ஒதுக்கும் விண்ணப்பத்தில் கையெழுத்திடும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளது" என்று வாதிடப்பட்டது
இதனை தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தில் கூறியதாவது:- 2017-ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டனர். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும். இவ்வாறு ஓபிஎஸ் தரப்பினர் வாதிட்டனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள் சசிகலா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை வரும் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications