தந்தை, மகன் மரணத்தில் ஹைகோர்ட் சொல்லியும்.. இன்னும் கைது செய்யவில்லையே ஏன்.. ஸ்டாலின்
சென்னை: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் ஆதாரங்கள் உள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தும் இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்? என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கூடுதல் நேரம் கடை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் கோவில்பட்டி சிறையில் அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவத்திற்கு நாடு முழுவதிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பா உயர் நீதிமன்ற மதுரைகிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நேற்றைய விசாரணையில், 'ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் பார்த்தால், தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது' என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. எனினும் காவல்துறையினர் யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.
.@CMOTamilnadu நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள்.
— M.K.Stalin (@mkstalin) June 30, 2020
சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது.இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்?#ArrestKillersOfJayarajAndBennix pic.twitter.com/Yz4P18oi3s
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், 'எடப்பாடி பழனிசாமி நீங்கள், நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதுமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது. இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்?
காவல்துறைக்கு தலைமையாக, இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இவ்வழக்கில் உள்ள ஆதாரங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிறீர்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படி செயல்படும்போது நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications