பழனிசாமிக்கு “பகீர்” கிளப்பும் “பீகார்”.. கண்முன் வரும் காட்சிகள்! நிதீஷ்போல் நிமிர்வாரா? பலே பாஜக
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் உச்சக்கத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இரு தரப்பு பாஜகவை நம்பி வருகின்றனர். ஆனால், பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து மாநில கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி இருப்பது பல மாநில கட்சிகளுக்கு படிப்பினையாக அமைத்து உள்ளது.
அதிமுக உள்கட்சிப் பிரச்சனை பூதாகரம் எடுத்து எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்த நகர்வுகளை எடுத்து வருகின்றனர். ஆனால், தொடக்கத்தில் இருந்தே அலுவக வழக்கு, வங்கிக் கணக்கு விவகாரம் போன்றவற்றில் எடப்பாடி கையே ஓங்கி இருந்தது.
இந்த நிலையில், மேற்கு பக்கம் வீசிய டெல்லி காற்று தற்போது தெற்கு திசையில் வீசத் தொடங்கி இருப்பதை பார்க்க முடிகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு தொடர்புடைய இடங்களில் நடக்கும் அதிரடி சோதனைகள், வேகமாக நகரும் வழக்குகள் இதை காட்டுகின்றன.
அவசர அவசரமாக.. வக்கீல்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. செம டென்ஷனில் சீனியர்
எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலையுடன் ராம்நாத் கோவிந்த் பிரவு உபசார விழாவுக்காக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று பேசப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்றுவிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவிலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என்றும், இடைபட்ட நேரத்தில் அதிமுக உள்கட்சி நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் விவாதிப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்த சூழலில் பிரதமரை சந்திக்காமல் அவர் சென்னைக்கு திரும்பியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
ஆபரேசன் சவுத் இந்தியா
பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது 2 வது பெரிய கட்சியாக மாற்று சக்தியாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஐதராபாத் செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா சொன்னதைபோல தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றும் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை செயல்படுத்த துரிதமாக காய் நகர்த்தி வருகிறது பாஜக. இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படுவதை தங்களின் ஆபரேசன் தென் இந்தியா திட்டத்துக்கு சிக்கலாகவே பார்க்கிறது.
எடப்பாடியால் என்ன சிக்கல்?
எடப்பாடி தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் 2021 தேர்தல் முடிந்தவுடன் தோல்விக்கு பாஜக கூட்டணியே காரணம் என்று கூறியது, எடப்பாடி ஆதரவாளரான பொன்னையன் தமிழ்நாட்டின் பிரச்சனைகளுக்காக போராடாத பாஜகவை அம்பலப்படுத்த வேண்டும் என்று பேசியது, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இருந்து நீக்கியது என்பன போன்ற காரணங்களால் எடப்பாடியையும் அவரது ஆதரவாளர்களும் பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்றே பாஜக கருதுகிறது.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பை பொறுத்தவரை விட்டுக்கொடுத்து செல்பவர் என்ற பெயரை டெல்லிவரை பெற்று இருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்து விட்டதாக பேசியது, பாஜக ஆதரவாளர் குருமூர்த்தி ஆலோசனைபடி தர்மயுத்தத்தில் ஈடுபட்டது, தர்மயுத்தத்தின்போது பாஜக அனுதாபிகளான மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன் ஆகியோரை உடன் வைத்துக்கொண்டது என தாமரை தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார் ஓபிஎஸ். எனவே எடப்பாடி தரப்பை ஒப்பிடுகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பரவாயில்லை என்பதே பாஜகவின் நிலைபாடாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
பீகார் நிலவரம்
பீகாரில் 2017 ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் தயவுடன் ஆளும் கூட்டணியில் தடம் பதித்த பாஜக, 2020 தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால் நிதீஷ் குமார் கட்சி குறைந்த இடங்களிலேயே வென்றது. ஆனாலும் நிதீஷ் குமாரை முதலமைச்சராக்கிய பாஜக, பீகார் அரசின் அதிகாரத்தை கையில் எடுத்து தன்னிச்சையாக பாஜக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன் காரணமாகவே நிதீஷ் குமார் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
நிதீஷ் குமார் நடவடிக்கை
பீகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது பாஜகவுக்கு 9 ல் ஒரு இடத்தை மட்டுமே ஜேடியு வழங்கியது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டங்களை நிதீஷ் குமார் எதிர்த்து வருவது, பாஜகவுக்கு விருப்பமின்றி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயன்றது, மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தது போன்ற விசயங்களால் பாஜக தலைமையும் நிதீஷ் குமார் மீது அதிருப்தியில் இருந்திருக்கிறது.
ஆர்.சி.பி. சிங்
இதனை தொடர்ந்து பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் ஆர்.சி.பி.சிங்கை வைத்து அக்கட்சியை உடைக்க முயன்றது. மத்திய அமைச்சரவையில் ஜேடியு அங்கம் வகிக்காது என நிதீஷ் தெரிவித்த நிலையில், அதை மீறி பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவராக இருந்த ஆர்.சி.பி. சிங்கிற்கு கட்சித் தலைமையிடம் கருத்து கேட்காமல் மத்திய அமைச்சர் பதவி வழங்கியது பாஜக.
நிதீஷ் குமாரின் செக்
இது நிதீஷ் குமாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆர்.சி.பி. சிங் பாஜகவினருடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருவதை முன்கூட்டியே சுதாரித்த நிதீஷ் குமார், அவர் மத்திய அமைச்சராக தொடர முடியாத வகையில் அவருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்க நிதீஷ் மறுத்தார். இதனால் கடந்த ஜூலை மாதம் ஆர்.சி.பி. மத்திய உருக்குத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
கட்சியிலிருந்து விலகல்
அதன் தொடர்ச்சியாக ஆர்.சி.பி. சிங் மீதான ஊழல் வழக்குகள் வேகமெடுக்கத் தொடங்கின. அவரது குடும்பத்தினர் பெயரில் சேர்ந்திருக்கும் சொத்துக்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் நோட்டீஸ் அனுப்பியது. நிதீஷ் குமார் தன்னை குறிவைப்பதை உணர்ந்த ஆர்.சி.பி. சிங்கும் கட்சியிலிருந்து வெளியேறுவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.