தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..காரைக்காலில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை..காரணம் என்ன?
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்கள் பள்ளி கல்லூரிகள் விடுமுறையளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு திரும்பினர். கார்னிவல் பண்டிகையை முன்னிட்டு காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை கடந்த 14ம் தேதி போகியுடன் தொடங்கியது. இதனையடுத்து பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என வரிசையாக நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பள்ளிகள் 18ம் தேதியான இன்று செயல்பட இருந்த நிலையில், திடீரென ஒரு புரளி கிளம்பியது. 18ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதுதான் அந்த புரளி. எனவே மாணவர்கள் குஷியடைந்தனர்.
ஆனால் இந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பள்ளி திறப்பு குறித்து கடந்த 16ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகள் வழக்கம்போல 18ம் தேதி செயல்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் இன்று காலை முதல் பள்ளி பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளன. இந்த விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கையில் பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

தாமதம்
இதனால் மாணவர்கள் பள்ளி செல்வது தாமதமாகியுள்ளது. ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 15,599 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இப்பேருந்து சேவையானது 17 மற்றும் 18ம் தேதி வரை நீடிக்கும். தற்போது வரை சுமார் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் வெளியூருக்கு சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனை சரி செய்யும் பணியில் காவல்துறையினர் அதிகாலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். பெருங்களத்தூரை பொறுத்த அளவில் 17ம் தேதியான நேற்றிரவு முதல் போக்குவரத்து நெரிசல் தொடங்கிவிட்டது.

தனியார் பேருந்துகள்
தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் மக்கள் செங்கல்பட்டு திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையலாம் என்றும், அதேபோல செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னைக்கு வரலாம் எனவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. மறுபுறம் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், இந்த பேருந்துகள் எண்ணிக்கை போதவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே தனியார் பேருந்துகளிலும், வாடகை கார்களிலும் சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

இணைப்பு பேருந்துகள்
சென்னை வரும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு ஏதுவாக மெட்ரோ ரயில் சேவை இன்று அதிகாலை 5 மணிக்கே தொடங்கிவிட்டது. அதேபோல இணைப்பு பேருந்துகளும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு பின்னர் சென்னை திரும்பும் மக்கள் எதிர்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய சிக்கல் இணைப்பு பேருந்து வசதிதான். இந்த முறையும் சென்னையில் இணைப்பு பேருந்து வசதிகள் போதுமான அளவு செய்து கொடுக்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை
காரைக்காலில் இன்றைய தினம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நான்கு நாட்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்கு முன்பும் கல்வி நிலையங்களில் மாணவ, மாணவிகள் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். காரைக்காலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கார்னிவல் விழா நடைபெற்று வருகிறது. இன்று இறுதி நாள் விழா நடைபெறுவதை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 18 ஆம் தேதி விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications