நாம் தமிழர் கட்சி தலைவர் பிரபாகரன்.. தேர்தல் ஆணையத்தில் பதிவே செய்திருக்கிறோம் தெரியுமா? சீமான்
சென்னை: நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தம்பி விஜய்தான்; ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவர் பிரபாகரன் என இந்திய தேர்தல் ஆணையத்திலேயே பதிவு செய்திருக்கிறோம் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் சேர்க்கப்பட்டார். தமிழ்நாடு சட்டசபையில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது சபாநாயகர் காளிமுத்து, பிரபாகரனை கைது செய்து தூக்கிலிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்.

தற்போதும் இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீடிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாகவும் அதன் தலைவர் பிரபாகரன் படங்களைப் பயன்படுத்தவும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்துக்கு விஜய்தான் தலைவர். ஆனால் என் கட்சிக்கு தலைவர் யார் தெரியுமா? பிரபாகரன் என சொல்லி இருக்கிறேன் என்பது அல்ல.. இந்திய தேர்தல் ஆணையத்திலேயே பிரபாகரன்தான் என் கட்சியின் தலைவர் என பதிவே செய்திருக்கிறோம் என சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பிரபாகரனை நாங்கள் எங்கள் கட்சியின் தலைவராக மட்டும் பார்க்காமல் 13 கோடி தமிழ்த் தேசிய இனத்தின் தலைவராகவும் பார்க்கிறோம் ஆகையால் விஜய் கட்சியையும் எங்கள் கட்சியையும் ஒப்பிடுவதே தவறு என்றார்.
அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனை தலைவராக ஒரு கட்சி தெரிவித்தால் அதை இந்திய தேர்தல் ஆணையம் எப்படி ஏற்றுக் கொண்டிருக்கும்? என்கிற கேள்வியும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் எழுப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications