செங்கோட்டையன் வீட்டுக்கு படை திரண்டு வரும் தொண்டர்கள்.. பரிவட்டம் கட்டி வாழ்த்து!
ஈரோடு: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்த நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அவரது வீட்டுக்கு திரண்டு வருகின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளர்களும் செங்கோட்டையனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று செங்கோட்டையனுக்கு அர்ச்சகர்கள் பரிவட்டம் கட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியது. இதையடுத்து, தனது மனதில் இருப்பதைச் சொல்லப் போவதாக அறிவித்திருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

செங்கோட்டையன் கிளப்பிய புயல்
செங்கோட்டையன் கடந்த 5 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை எல்லாம் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு 10 நாள் கெடு நிர்ணயித்து இருக்கிறேன். அது நடக்கவில்லை என்றால் இதே கோரிக்கைகளை வலியுறுத்துபவர்களை எல்லாம் ஒன்றிணைப்பேன். அதுவரை எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார சுற்றுப் பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறினார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் பதவிகள் பறிப்பு
செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த சுமார் 2000 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். செங்கோட்டையனுக்கு ஆதரவாக அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவிகளை முன்னாள் எம்.பி சத்தியபாமா ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையனிடம் அளித்தார். சில நிமிடங்களுக்குள் அவரை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், "இந்த அறிவிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பது தொண்டர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு. அதை வெளிப்படுத்தும் விதமாகத் தான் நான் பேசியிருந்தேன். அதற்கு இன்று கழகத்தின் பொறுப்புகளிலிருந்து என்னை விடுவித்துள்ளார்கள். இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும். என்னுடைய பணி நான் ஏற்கனவே சொன்னதை நோக்கி தொடரும்" எனத் தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையன் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்
தொடர்ந்து, செங்கோட்டையனின் கோபிசெட்டிப்பாளையம் இல்லத்தில் தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வருகின்றனர். செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அவரது வீட்டில் திரண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முக்கிய நிர்வாகிகளுடன் செங்கோட்டையன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
பரிவட்டம் கட்டி வாழ்த்து
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் கொடுத்த செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்க ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அணி அணியாக திரண்டு வருகின்றனர். கோவையை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செங்கோட்டையனை நேரில் சந்தித்து, சிங்காநல்லூர் சிவன் கோவில் பிரசாதத்தை அளித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். செங்கோட்டையனுக்கு பரிவட்டம் கட்டி அர்ச்சகர்கள் ஆசிர்வாதம் செய்தனர்.
இந்நிலையில் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்றும், இன்றும் தொடர்ந்து என்னை வந்து சந்திக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications