ராஜ்யசபா தேர்தல்: இப்பவாவது நீண்டகாலம் உழைத்த எங்களுக்கு சீட் கிடைக்குமா? ஏங்கும் திமுக சீனியர்கள்
சென்னை: தமிழகத்தில் காலியாகும ராஜ்யசபா இடங்களில் தங்களுக்கு இந்த முறையாவது கட்சி தலைமை வாய்ப்பு தரும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் திமுகவுக்காக எந்த பலனையும் எதிர்பார்க்காமல் இதுநாள் வரை உழைத்த சீனியர் நிர்வாகிகள். இந்த சீனியர்களின் ஏக்கத்தை இம்முறையேனும் திமுக தலைமை பூர்த்தி செய்யுமா? என்பது எதிர்பார்ப்பு.
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்கள் பதவி காலம் முடிவடைய உள்ளது. திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ்குமார்; அதிமுகவின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார், நவநீதகிருஷ்ணன் ஆகியோரது பதவி காலம் முடிவடைகிறது. இதனையடுத்து ஜூன் மாதம் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கலுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
ஓ இதுதான் மேட்டரா? இளையராஜாவிற்கு ராஜ்யசபா எம்பி பதவி? டெல்லி களமிறக்கும் பிளான்! இப்படி ஒரு ரூட்டா?
திமுகவுக்கு 4 சீட்
தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்கள் பலத்தைப் பொறுத்தும் ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 34 அல்லது 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற அடிப்படையிலும் திமுகவுக்கு 4 எம்.பி பதவியும் அதிமுகவுக்கு 2-ம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திமுகவைப் பொறுத்தவரை மிக சீனியர்களுக்கும் விஷயம் தெரிந்தவர்களுக்கும்தான் மீண்டும் ராஜ்யசபா பதவி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. இந்த முறை பதவியில் இருந்து விலகும் 3 எம்.பிக்களுமே மீண்டும் சீட் பெறுவதற்கு மும்முரமாக உள்ளனர்.
குமுறும் சீனியர்கள்
அதேநேரத்தில் ஒவ்வொரு முறையும் கட்சி மேலிடத்தின் கடைக்கண் பார்வைக்கு சிக்கியவர்களை மட்டுமே ராஜ்யசபா எம்.பி.யாக்குகிறீர்கள்.. கட்சிக்காக சொந்த காசை போட்டு செலவழித்துவிட்டு கொள்கை, கொள்கை என்று மட்டுமே பேசி வாழ்க்கையையே தொலைத்த எங்களுக்கு என்னதான் செய்ய போகிறீர்கள்? என சீனியர்கள் பலரும் குமுறவும் தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக பகிரங்க கடிதங்களையும் தலைமைக்கு கொடுத்துவிட்டு தங்களுக்கு தெரிந்த கொள்கை லாபிகளை முன்னெடுக்கவும் தொடங்கி உள்ளனர்.
மல்லுக்கட்டும் காங்.
இது போதாது என்று திமுகவிடம் எப்பாடியாவது ஒரு சீட்டை வாங்குவது என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருக்கிறதாம். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி, இம்முறை எம்பியாவது என தீவிரமாக இருக்கிறாராம். இதனால் திமுகவுக்கு அதிதீவிரமான ஆதரவை வெளிப்படுத்தி போராட்டங்களை முன்னெடுக்கிறார். இன்னொரு பக்கம் மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யான மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் பதவிக் காலம் முடிவடைகிறது. ப.சிதம்பரத்துக்காகவும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிமுகவிலும் மல்லுக்கட்டு
இதேபோல் அதிமுகவில் இப்போதைக்கு சீனியர்களாக இருக்கும் மாஜி அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா என சிலர் எப்படியாவது ராஜ்யசபா எம்.பி.யாகிவிட படுதீவிரமாக முயற்சிக்கின்றனராம். தமிழகத்தில் மே மாதம் வெயில்காலம் முடிவடைவதற்குள் ராஜ்யசபா தேர்தல் களம் அனலடிக்கும் என்றே கூறப்படுகிறது.