எதுக்கு 78? அதிமுக இல்லாமல் பாஜகவால் ஒரு தொகுதியிலாவது ஜெயிக்க முடியுமா? கேட்பது யார்னு பாருங்க
சென்னை: அதிமுக இல்லாமல், பாஜகவால் ஒரு தொகுதியிலாவது ஜெயிக்க முடியுமா என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என பாஜக கூறிவருவதற்கு , எடப்பாடி பழனிசாமி வாய்த்திறக்காமல் இருப்பது நல்லதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் அளித்த பேட்டியை கேள்வி பதில் வடிவில் பார்ப்போம்.

கேள்வி: அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததிலிருந்தே தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா இல்லையா என்பது குறித்து தினந்தோறும் பேசும் பொருளாகியுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன? எடப்பாடியின் அமைதிக்கு என்ன காரணம்?
பதில்: அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த விதமும் நேரமும் சரியில்லை என பெரும்பாலான விமர்சகர்கள் சொன்னார்கள். 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் போது எடப்பாடி பழனிசாமியை மிரட்டி அழைத்து சென்றது போல் இருக்கிறதே, என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
அமித்ஷா கூட்டணி ஆட்சி என சொன்னது குறித்து எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அமித்ஷா அப்படி சொல்லவில்லை என சொன்னார். ஆனால் எடப்பாடி என்ன சொல்லியிருக்க வேண்டும் என்றால், அமித்ஷா சொன்னால் சொல்லட்டும். எங்களை பொருத்தமட்டில் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான், கூட்டணி ஆட்சி எல்லாம் சரிவராது என சொல்லியிருந்தால் இந்த பிரச்சினைக்கு அன்றே முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை அமித்ஷா இன்று வரை சொல்லவில்லை.
4 நாட்களுக்கு முன்புதான் நயினார் நாகேந்திரன் சொல்லியிருக்கிறார். இனியாவது எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஏதோ ஒரு காரணத்திற்காக அமைதியாகவே இருந்தால் அது அதிமுகவுக்கு நல்லதல்ல.

தொடர்ந்து பாஜக இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவினர் எப்படி வேலை செய்வார்கள். அதிமுக இல்லாமல் பாஜகவால் ஒரு தொகுதியிலாவது ஜெயிக்க முடியுமா? அதிமுக உதவியுடன்தான் ஜெயிக்க முடியும் என பாஜகவுக்கு நன்றாக தெரிந்திருந்தும் அவர்களை சீண்டி பார்க்கும்படியான வகையில் பேசுவது ஏற்புடையது அல்ல.
அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் 3 இல் ஒரு பங்கு இடத்தை பாஜக கேட்கிறது. அந்த அளவுக்கு பாஜக வளர்ந்துவிட்டதா? அண்ணாமலை தனது தொண்டர்களை உற்சாகப்படுத்த எந்த கருத்தை கூறினாலும் அதை புறந்தள்ள முடியாது. ஏனென்றால் அவர் செல்வாக்குமிக்க தலைவர்.
கேள்வி: அதிமுக பாஜக கூட்டணி உடைவதைதான் அண்ணாமலை விரும்புகிறார், அதற்காகத்தான் இப்படி சர்ச்சையாக பேசி வருகிறார் என்கிறார்களே?
பதில்: அவருடைய அரசியல் எதிரிகள் என்னவேண்டுமானாலும் சொல்லலாம். கூட்டணி உடைவது குறித்து கவலைப்பட வேண்டியது அமித்ஷாதான்.
கேள்வி: கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு 20 சதவீதம், பாஜக கூட்டணிக்கு 18 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. இதை வைத்து 2026 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் சீட் கேட்கலாம் என அண்ணாமலை சொல்கிறாரே?
பதில்: அந்த 18இல் யாரெல்லாம் இருந்தீர்கள். பாஜக மட்டும் தனித்தா இருந்தது? பாமக இருந்தார்கள். அவர்கள் தற்போது பாஜகவுடன் கூட்டணி வருவதாக சொன்னார்களா? தேமுதிகவும் இருந்தார்கள். அவர்களும் வந்துவிட்டார்களா? அந்த இரு கட்சிகளும் பாஜகவுக்கு வந்துவிட்டேன் என சொல்லாமல் எதற்காக 18 சதவீத வாக்குகளை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
11 சதவீதம் என ஒரு கணக்கு சொல்கிறார். அந்த 11 சதவீதமும் பாஜக மட்டும் தனித்து வாங்கவில்லை. தென் சென்னை என்பது வன்னியர்கள் அதிகம் இருக்கும் தொகுதி. இந்த தொகுதியில் தமிழிசைக்கு பாமகவினரும்தானே ஓட்டு போட்டார்கள். இதெல்லாம் தெரியாமல் அதிமுக 2 தொகுதிகளில் நின்றால் பாஜக ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
பாமக, தேமுதிகவை சமாதானம் செய்து தன் அணிக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மெகா கூட்டணியாகவும் வெற்றி கூட்டணியாகவும் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications