செந்தில்பாலாஜி இனியும் அமைச்சராக நீடிப்பது முதல்வருக்கு இழுக்கு.. “தூக்குங்க”- திரி கொளுத்தும் பாஜக!
சென்னை : இனியும் செந்தில்பாலாஜி தமிழக அமைச்சராக நீடிப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இழுக்கு என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
செந்தில் பாலாஜி மீதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
அரசின் மாண்பு, மதிப்பு நீதிமன்ற உத்தரவால் காற்றில் பறக்கக்கூடிய நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் மீதான வழக்கு
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்குகள், எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ளன. அமலாக்கத்துறை தனியாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.

அதிரடி உத்தரவு
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், செந்தில் பாலாஜி மீதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பது தெரியவந்தால் அதுதொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் விசாரணை அதிகாரி வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பாஜக சீண்டல்
இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி மோசடி செய்து விட்டார் என்று குற்றம்சாட்டிய இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மீண்டும் அமைச்சராக்கப்பட்ட செந்தில் பாலாஜியை, அந்த குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளது என்றும், மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலினுக்கு இழுக்கு
இனியும் செந்தில்பாலாஜி தமிழக அமைச்சராக நீடிப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இழுக்கே. இந்த அரசின் மாண்பு, மதிப்பு அனைத்துமே நீதிமன்ற உத்தரவால் காற்றில் பறக்க கூடிய நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர் சீண்டல்
அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கடுமையாகச் சீண்டி வந்த நிலையில், இருவருக்கும் இடையேயான வார்த்தைப் போர் வலுத்தது. அண்ணாமலை மட்டுமல்லாமல் பாஜக நிர்வாகிகள் பலரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறி வைத்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது பாஜக.












Click it and Unblock the Notifications