சென்னையில் மூடி மூடி திறக்கும் வானம்... ஆனாலும் புழுக்கம் குறைந்தபாடில்லை
சென்னை: சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் புழுக்கம் குறையாமல் இருப்பதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக வெயில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கூடவே அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் பெரும் தவிப்படைந்துள்ளனர்.
பருவமழை பொய்த்து போனதால் வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொளுத்த வேண்டிய வெயில் ஜனவரி மாதம் முதலே கொளுத்த தொடங்கி விட்டது. இதனால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்து விட்டது.

ஃபனி புயல்
இதனால் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு புறநகர் பகுதிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அண்மையில் வங்கக்கடலில் உருவான ஃபனி புயல் தமிழகத்தை தாக்கும் என கூறப்பட்ட நிலையில் அந்த புயல் ஒடிசாவை தாக்கியது.

புழுக்கம்
இதனால் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடுமையான புழுக்கம் நிலவி வருகிறது.

குறையாத புழுக்கம்
ஒடிசாவை தாக்கிய ஃபனி புயல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சியதே இந்த புழுக்கத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மூடி மூடித் திறக்கிறது. இருப்பினும் புழுக்கம் குறைந்தபாடில்லை.

மழைக்கு வாய்ப்பு
இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் வாட்டி வதைத்தாலும் வானிலை மையத்தின் இந்த தகவல் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications