உ.பி., பீகார் குறித்து பேசுவோருக்கு.. இங்கே சமூகநீதி பெயரளவில் தான் உள்ளது..அண்ணாமலை குற்றச்சாட்டு!
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதைச் சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ஆனால் இங்கோ சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என்று மேடைக்கு மேடை பேசுவதும், தமக்குத்தாமே சமூகநீதிக் காவலர் என்ற பட்டங்களை சூட்டிக் கொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர் திமுக தலைவர்கள்.
போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பேசும் முதல்வரே.. முதலில் மதுபான கடையை மூடுங்கள்.. அண்ணாமலை அதிரடி!
கள்ளக்குறிச்சி பிரச்னை
சமீபத்தில் சின்னசேலம் வட்டம் எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜ் ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருடன் பாஜக மாநில துணைத்தலைவர் எம்.சி சம்பத், சுதா வரதராஜை நேரில் சந்தித்த பின், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
தீண்டாமை ஒழிப்பு இயக்கம்
பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜனுக்கு சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றலாம் என்று தீர்வு எட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் நடத்திய கணக்கெடுப்பில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. 24 மாவட்டங்களில் 386 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 20 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அமர இருக்கை மறுப்பு
அதுமட்டுமல்லாது 22 ஊராட்சிகளில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அமர இருக்கை மறுக்கப்பட்டு தரையில் அமர்த்தப்படுகிறார்கள். 42 ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்களின் பெயர்ப்பலகை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
சமூகநீதி பிரச்னை
இங்கு அமர்ந்து கொண்டு உத்தரப்பிரதேசத்தில் என்ன நடக்கிறது, பீகாரில் என்ன நடக்கிறது என்று விவாதித்துக் கொண்டிருக்கும் சிலர், தமிழகத்தில் சம உரிமையோடு அனைத்து மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற மாயையில் இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் சமூகநீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதை சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.