என்னாது.. இத்தனை சீட்டா.. அதிரவைக்கும் தேமுதிக.. திரும்பி கூட பார்க்காத அதிமுக!
தேமுதிக அதிமுகவிடம் 40 சீட்டுகள் கேட்கும் என்கிறார்கள்
சென்னை: விஜயகாந்த் ஒன்று கேட்டால், அதிமுக வேறு மாதிரியான பதிலை சொல்லிவிடும்போல தெரிகிறது.. எல்லாம் இந்த சீட் விவகாரத்தில்தான்.. தேமுதிக கணக்கு வேற லெவலில் உள்ளதாக கூறப்படுகிறது!
பிரேமலதா கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன... அப்போது மாபெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை தேமுதிக பெற்றது.. அதுபோலவே, இந்த முறை தேர்தலிலும் 41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் தேமுதிக கூட்டணி அமைக்கும்... இல்லாவிட்டால், தனித்து களமிறங்கும்" என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.
பிரேமலதாவின் இந்த பேச்சுதான் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.. இந்த பேச்சு மட்டுமல்ல, விஜயகாந்த் பிறந்த நாள் அன்று செய்தியாளர்களிடம் பேசும்போதும், "சிங்கம் சிங்கிளாகவே போட்டியிடும்" என்றார்.. இதையும் அதிமுக தரப்பு உன்னிப்பாக கவனித்தது.
சுதீஷ்
அதேபோல சுதீஷ் பதிவிட்ட கார்ட்டூனின் அதிர்ச்சியும் விலகவே இல்லை.. அந்த கார்டூனின் நடுவில் விஜயகாந்த் நிற்க, அவரது காலடியில் மஞ்சள் துண்டு தோளில் போட்ட பெரியவர், கறுப்பு சட்டை போட்டவர், வெள்ளை வேட்டி சட்டையில் பிற அரசியல்வாதிகள், உள்ளிட்ட நிறைய பேர் விஜயகாந்தை சுற்றி, கீழே விழுந்து கும்பிடுவது போல வரையப்பட்டது.. இந்த கார்ட்டூனை பார்த்து திமுக மட்டுமல்ல, அதிமுகவும் கொந்தளித்துவிட்டது. அந்த கார்டூனை சுதீஷ் உடனடியாக நீக்கிவிட்டார் என்றாலும் இன்னமும் ஷாக் இருக்கத்தான் செய்கிறது.. இதையும் அதிமுக தரப்பு கவனித்தது.
பாமக
இப்படிப்பட்ட சூழலில்தான், தேமுதிக அதிமுகவிடம் சீட் பேரம் நடத்த போகிறது.. எப்படியும் திமுக பக்கம் வாய்ப்பு இல்லை என்பதால், அதிமுக என்ன சீட் தருகிறதோ அதையே வாங்கி கொள்ளும் மனநிலையில் இருக்கிறதா அல்லது சென்ற முறை பாமகவுடன் போட்டி போட்டு கொண்டு சீட் கேட்டதுபோலவே இந்த முறையும் பிடிவாதம் பிடிக்க போகிறதா என்று தெரியவில்லை.
சீட் ஒதுக்கீடு
ஆனால், தேமுதிக 41 சீட் கேட்பதாக முன்னரே ஒரு செய்தி கசிந்தது.. அந்த அளவுக்கு சீட் ஒதுக்கீடு சாத்தியமா என்பது அதிமுக தரப்பின் சந்தேகம். ஏற்கனவே பாஜக 60 கேட்கிறார்கள்.. பாமக 33-க்கு லிஸ்ட் தருகிறார்கள்.. இதில் தேமுதிகவும் 40-க்கு மேல் கேட்டால் அது சாத்தியம் இருக்காது. அதேசமயம் இந்த முறை 40 சீட்டுகளை தேமுதிகவே கேட்காது, 25 தந்தாலும் அதை பெற்றுக் கொள்ளும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
வெற்றிவாகை
2006, 2011 ஆகிய 2 தேர்தல்களில் மட்டும்தான் தேமுதிக வெற்றிவாகையை சூடிய நிலையில், அடுத்தடுத்த தேர்தல்களில் அவ்வளவாக சோபிக்கவில்லை.. அதனால், 25 சீட்டுகள் என்பதுகூட சந்தேகமே என்கிறார்கள் மற்றொரு தரப்பினர்.. அன்று விஜயகாந்த் உடல்நலத்துடன் இருந்தார்.. எல்லா இடங்களிலும் ஒற்றை மனிதராக பிரச்சாரத்தை கையில் எடுக்கவும்தான் வெற்றிகள் சாத்தியமானது.. இப்போது "விஜயகாந்த் முன்பு போல் இல்லை என்றும், பிரசார காலத்தின் "கிளைமாக்ஸில்" பிரசாரம் மேற்கொள்வார்" என்று பிரேமலதாவே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.
ரஜினிகாந்த்
அதனால் எப்படியும் அதிகபட்சமாக வருகிற தேர்தலில் 15 தொகுதிகளை அதிமுக தேமுதிகவுக்கு ஒதுக்கலாம் என்கின்றனர்... இதனிடையே மற்றொரு செய்தியும் கசிந்து வருகிறது.. ரஜினி எடுத்த முடிவில் தேமுதிக இப்போது செம குஷியில் இருக்கிறதாம்.. ரஜினி கட்சி துவங்கினால், தனக்கு பெரும் பின்னடைவு ஏற்படுமோ என்று தேமுதிக பயந்தது.. பீதியடைந்தது.. ஆனால், ரஜினி ஒதுங்கி கொண்டது, தேமுதிக தலைமைக்கும், அக்கட்சியின் நிர்வாகிகளுக்கும், திடீர் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. தேர்தல் பணிகளும் ஜரூராக தொடங்கி விட்டார்களாம்!