செஸ் ஒலிம்பியாட்... ஒரு செஸ் போர்டின் விலை ரூ.30 ஆயிரம்.. போட்டிக்குபின் என்ன செய்வார்கள் தெரியுமா?
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பயன்படுத்தப்படும் செஸ் போர்டின் விலை ரூ.30 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின் ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று முதல் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் இந்திய அணியினர் வெற்றிபெற்றது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருந்தது.

பார்வையாளர்கள் பிரமிப்பு
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் 8 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள், நிகழ்த்துக் கலை, இசை நிகழ்ச்சிகள் ஆகியவை பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

ஆச்சரியமளிக்கும் தயாரிப்புகள்
அதேபோல் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு பரிமாறப்படும் உணவுகள் ஆச்சரியத்தை அதிகரித்துள்ளது. இவர்களுக்கு 53 மெனுவில் 700க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியமான உணவுகள் மீண்டும் மீண்டும் ஒரே வகையில் வழங்கப்படக்கூடாது என கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி செஸ் ஒலிம்பியாட் தொடர்பான ஒவ்வொரு தகவல்களும் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

செஸ் போர்டு விலை
அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் செஸ் போர்டின் விலை இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச வீரர்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு செஸ் போர்டின் விலை ரூ.30 ஆயிரமாகும். இவை அனைத்தும் நெதர்லாந்து நாட்டில் தயாரித்து இறக்குமதி செய்யப்பட்டவை. இதுபோன்று 714 செஸ் போர்டுகள் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வாங்கப்பட்டுள்ளது.

என்ன வசதிகள்?
இந்த செஸ் போர்டுகள் அனைத்தும் ஆட்டத்தின் ஒவ்வொரு நகர்வுகளையும் பதிவு செய்துகொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீரர்கள், தங்களது ஆட்டத்தினை மறு ஆய்வு செய்து, அதற்கேற்ப விளையாட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் செஸ் போர்டுகளில் வீரர்களின் ஒவ்வொரு காய் நகர்தல்களும் சென்சார் உதவியுடன் தனித்தனி லேப்டாப்களில் பதிவாகி, அதிலிருந்து இணையம் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதேபோல் தொலைக்காட்சி மற்றும் யூ-ட்யூப் சேனல்களிலும் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.
Recommended Video

அவற்றின் நிலை என்ன?
இதனால் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின் இவற்றின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் செஸ் போர்டுகளை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தரப்பில் வாங்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செஸ் ஒலிம்பியாட் முடிவடைந்த பின், செஸ் போர்டுகளை சர்வதேச செஸ் கூட்டமைப்பு நிர்வாகம் ஏலத்தில் விற்பனை செய்யும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications