தென்மாநில மருத்துவத் துறை அமைச்சர்கள் பங்குபெறும் பாரம்பரிய மருத்துவ கருத்தரங்கம்
சென்னை : இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் சில மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. கேரளா போன்ற மாநிலங்களில் மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று முதல் அலை மற்றும் இரண்டாம் அலை நேரத்தில் இணை மருத்துவமாக செயல்பட்ட பாரம்பரிய மருத்துவத்தை உலக அரங்கில் அங்கீகாரம் பெறவும், இனிவரும் காலங்களில் நோய்த் தொற்று ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள்வது எனவும், மக்களை எவ்வாறு பாதுகாக்கலாம் எனவும், கூட்டு முயற்சியாக தென்னிந்திய முதல் பாரம்பரியம் மருத்துவ கருத்தரங்கம் அக்டோபர் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய அமைச்சர், அரசு செயலாளர்கள், அயல் நாட்டு தூதர்கள் கலந்துகொண்டு கருத்துரைக்க உள்ளனர். இந்நிகழ்வு மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில், தேசிய சித்த கல்லூரி மற்றும் இந்திய மருந்தக இயக்குனரகம் வழிகாட்டுதலோடு நடைபெற உள்ளது.
நம் பாரம்பரிய மருத்துவம், மருத்துவ சோதனைகள் (Clinical Trial) கிளினிக்கல் ட்ரையல் போன்ற நடைமுறைகளை மாநில அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மூலம் உலக சுகாதார அமைப்பில் அங்கீகாரம் பெற்று நம் மருத்துவத்தை அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்ய இந்த கருத்தரங்கம் முன்னெடுக்கவுள்ளது.
இறுதியாக கொரோனா பேரிடர் நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய சித்த, ஆயுர்வேத, நேச்சுரோபதி, மருத்துவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் ஆராய்ச்சி ஆவணங்கள், இந்திய அரசுக்கும், உலக சுகாதார அமைப்பிற்கும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. ஆராய்ச்சி கட்டுரைகளை 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ஆவணப்படுத்த உள்ளனர்.
இந்த அரிய நிகழ்வை உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் ஆயுஷ் கவுன்சில் இணைந்து நடத்துகிறது என ஏற்பாட்டுக் குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications