தென்மேற்குப் பருவமழை அபாரம்...அமராவதி, சோலையாறு அணைகள் நிரம்பின - தண்ணீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அமராவதி, சோலையாறு அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தென்மேற்குப் பருவமழை கோவை, நீலகிரி மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக வெளுத்து வாங்கும் கனமழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பில்லூர் அணை நிரம்பியுள்ளது. சோலையாறு, அமராவதி அணைகளும் நிரம்பி வழிகின்றன. அணைகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமழைந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சோலையாறு அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்தது.
சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது.
இந்த நிலையில் சோலையாறு அணை நிரம்பியதால், தானாக வெளியேறும் சேடல் பாதை வழியாக 867 கன அடித் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேறி வருகிறது. சேடல் பாதை வழியாக தண்ணீர் வெளியேறும் காட்சியை பொது மக்கள் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டேயிருப்பதால் வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்கு அருகில் தண்ணீர் சென்று வருகிறது. கூழாங்கல் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஒடிவருகிறது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோலையாறு அணையில் முகாமிட்டு அணையின் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்துக் கொண்டேயிருப்பதால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வெள்ள அபாய எச்சரிக்கை ஒலிபெருக்கி மூலமாக விடுக்கப்பட்டு வருகிறது.
உடுமலை சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் கனமழையால் அமராவதி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து அணை கிடுகிடுவென நிறையத் தொடங்கியது. 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை இன்று காலையில் 86 அடியை எட்டிய நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அதனுடைய முழு கொள்ளளவான 90 அடியையும் எட்டியது.
அணையின் பாதுகாப்பு நலன் கருதி தற்பொழுது மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுப்பணித்துறை, வருவாய் துறை மற்றும் காவல் துறையினரும் பொது மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே பில்லூர் வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. பில்லூர் அணைக்கு, விநாடிக்கு 15 ஆயிரம் கன அடிக்கு நீர்வரத்து வந்து கொண்டு இருந்ததால், பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக இன்று பவானியாற்றில் திறந்து விடப்படுகிறது. இதில், மின் உற்பத்திக்காக மட்டும் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பவானியாற்றுக் கரையோரப் பகுதிகளான மேட்டுப்பாளையம்,சிறுமுகை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளதால் ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் கரையோரம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.