உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு, சித்திரை முதல்நாள் கொண்டாட்டம் - கோவில்களில் சிறப்பு வழிபாடு
சித்திரை முதல்நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னை: சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழகத்தில் சித்திரை முதல்நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்று சித்திரை 1ஆம் தேதி, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பொங்கல் பண்டியை போன்று விமர்சையாக கொண்டாடப்படும் இந்த தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உலகம் போற்றும் வகையில் சிறப்பித்து வருகின்றனர். இந்த நன்னாளில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் வாழ்த்து
உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற எங்கள் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், மீண்டும் ஒருமுறை எங்களது நெஞ்சார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம் என்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வாழ்த்துச்செய்தியில், சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஒளி மயமான எதிர்காலம் தமிழ் குலத்துக்குக் கட்டியம் கூறும் இவ்வேளையில், சுதந்திரத் தமிழ் ஈழம் மலரவும், தாய்த் தமிழகத்தில் மது அரக்கனின் கொடுமை நீங்கவும், தமிழக மீனவர்களின் அல்லல்களை அகற்றவும், விவசாயிகளின் துயர் துடைக்கவும் இச்சித்திரைத் தலைநாளில் சூளுரை மேற்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது வாழ்த்துச்செய்தியில் உலகிலேயே தொன்மையான இலக்கிய, இலக்கண வளங்கள் நிறைந்த தமிழைப் பேசும் தமிழ் மக்களுக்கு கனிவான தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சி நிறையட்டும் என பிரார்த்திக்கிறேன். சுபகிருது புத்தாண்டு, எல்லா சுபங்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் என வாழ்த்துகிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications