“இந்த பிரியாணி ஹோட்டலிலா இப்படி?” - 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் - உணவுப் பிரியர்கள் ஷாக்!
சென்னை : சென்னையில் உள்ள பிரபலமான பிரியாணி ஹோட்டல்களில் ஒன்று யா மொகைதீன் பிரியாணி. இந்த ஹோட்டலில் உணவுப் பிரியர்கள் பிரியாணி சாப்பிடக் குவிவது வழக்கம்.
சமீப காலமாக இந்த ஹோட்டலில் இறைச்சி பழையது போல இருக்கிறது என உணவுப் பிரியர்கள் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கும் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், அந்த ஹோட்டலில் இருந்த கெட்டுப்போன இறைச்சியை கைப்பற்றி அழித்தனர். இச்சம்பவம் அந்த ஹோட்டல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென ரெய்டு
சென்னை வடபழனியில் செயல்படும் பிரபலமான உணவகமான யா மொகைதீன் பிரியாணி ஹோட்டலில், உணவின் தரம் குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் அங்கு திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கெட்டுப்போன இறைச்சி
உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் இந்தச் சோதனையில் 50 கிலோ அளவில் சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அழுகிய, கெட்டுப்போன கோழி, ஆட்டு இறைச்சி அகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்த கெட்டுப்போன இறைச்சி மீது பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டு அவை அழிக்கப்பட்டன.
அபராதம்
மேலும் கெட்டுப்போன இறைச்சிகளை சமையலுக்குப் பயன்படுத்திய அந்த ஹோட்டலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், மீண்டும் கெட்டுப்போன இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்தினால் கடை நிரந்தரமாக மூடப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், கெட்டுப்போன இறைச்சி சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த இறைச்சியை கைப்பற்றி அழித்துவிட்டோம். அதன் மாதிரிகள் பகுப்பாய்வு கூடத்துக்கு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது தவறான போக்கு. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
உடனே புகார் சொல்லுங்க
பொதுமக்களும் உணவு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். உணவின் தரம் குறித்து சந்தேகம் எழுந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குளிர்சாதனம் உள்ளிட்ட உபகரணங்களை சரி செய்து, முறையான இறைச்சிகளை சமையலுக்கு பயன்படுத்துகிறோம் என்று ஹோட்டல் நிர்வாகம் உறுதிமொழி தரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.