சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவி பிடிக்க புதிய ஏற்பாடு.. கிளம்பியது சர்ச்சை
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து வரும் பயணிகள் நீராவி பிடிக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சர்ச்சையை கிளம்பியுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதிலிருந்து பாதுகாத்து கொள்ள மாஸ்க், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் அவசியம் என்கிறார்கள். அது போல் கொரோனாவின் சங்கிலியை உடைக்க தடுப்பூசியே தீர்வு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆவி பிடித்தல் அல்லது வேது பிடித்தல் எந்த ஒரு வைரஸின் வீரியத்தையும் மட்டுப்படுத்தும் என பாரம்பரிய மருத்துவ முறையை பின்பற்றும் மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு தற்போது நீராவி பிடிக்கும் கருவிகளை மக்கள் வாங்கிச் சென்று பயனடைகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து வரும் பயனாளிகள் நீராவி பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆவி பிடிக்க 10 கருவிகள் வாங்கப்பட்டு அதில் துளசி, கற்பூரவல்லி உள்ளிட்ட மூலிகை இலைகளை போட்டு ஆவி பிடிக்க வைக்கிறார்கள்.
இதன் மூலம் தொண்டையில் கொரோனா வைரஸ் போன்ற கிருமி இருந்தால் அதன் வீரியம் மட்டுப்படுத்தப்படும் என்கிறார்கள். இந்த நல்லதொரு முயற்சியை தமிழ்நாடு ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடங்கியுள்ளனர். சமூக இடைவெளி விட்டு ஒரே நேரத்தில் 10 பேர் ஆவி பிடிக்கிறார்கள். ஆர்பிஎஃப்பின் இந்த முயற்சி அனைவரது பாராட்டுக்குள்ளாகியுள்ளது.
இது நல்ல எண்ணத்தில் கொண்டு வரப்பட்ட முயற்சி என்றாலும் இது போல் ஒரே நேரத்தில் 10 பேர் ஆவி பிடிப்பதால் அவர்களில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் அடுத்தவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.