சென்னையில் கடத்தப்பட்ட கார்.. பாகிஸ்தான் எல்லையில் மீட்பு.. சேஸ் செய்து பிடித்த போலீசார்.. பரபர தகவல்
சென்னை: சென்னை திருமங்கலத்தில் கடத்தப்பட்ட கார் பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் காணாமல் போன காரை தமிழக போலீசார் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மீட்டுள்ளனர். காரின் அடையாளங்கள் மாற்றப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். தற்போது இந்த கார் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சமூக விரோத செயல்களுக்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை உள்பட பல்வேறு மாநிலங்களில் சொகுசு கார்களை திருடி, அதில் சில மாற்றங்களை செய்து மீண்டும் வேறு இடங்களில் விற்று சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

சென்னையில் திருடப்பட்ட கார்
இந்த நிலையில், கடந்த ஜூன் 6 ஆம் தேதி இரவு, சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த ஒருவரது ஆடம்பர சொகுசு கார் திருடு போனதாக திருமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காரை கடத்தி சென்றவர் சத்தேந்தர் சேகாவத் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடிய போலீசார் புதுச்சேரியில் வைத்து கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கார் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், இதுவரை 120க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை கடத்தியதாகவும் கூறியுள்ளார். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள சொகுசு கார்களை குறி வைத்து திருடி, அதில் சில மாற்றங்களை செய்து பணம் சம்பாதித்து வந்தது கண்டறியப்பட்டது.
பாகிஸ்தான் எல்லையில் கார் மீட்பு
மேலும், இவருடன் பலருக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் ராஜஸ்தானில் இருப்பதாகவும் கூறியுள்ளார். சென்னை மணலி பகுதியில் 2 கார்களும் திருடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை திருமங்கலம் போலீசார் வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் முகாமிட்டு, இந்த கார் திருட்டு கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தான் மாநிலம் பல்வார் மாவட்டத்தில் கார் கும்பல் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் இந்த காரை கண்டுபிடித்தனர். அந்த காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டதும், போலீசார் வருவதை அறிந்து காரை அங்கேயே விட்டுவிட்டு சென்றதும் தெரியவந்தது. கடந்த 85 நாட்களாக இந்த கார் திருட்டில் தொடர்புடைய விவரங்களை சேகரித்து வந்த நிலையில், சென்னையில் திருடப்பட்ட காரை போலீசார் கண்டுபிடித்தனர்.
45,000 கிமீ ஓடிய கார்
இதையடுத்து, இந்த காரானது உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அந்த காரிலேயே பல மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். வெறும் 85 நாட்களில் 45,000 கிமீ காரை ஓட்டிச்சென்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சமூக விரோத செயல்களுக்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கார் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சேகாவத், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கார் திருட்டு தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் திருடப்பட்ட கார், பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு அப்பகுதியினர் பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications