இடைநிலை ஆசிரியர்கள் பலருக்கு உடல் நலம் பாதிப்பு... போராட்டத்தை கைவிட மறுப்பு
சென்னை: தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தாலும் போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
கடும் குளிரின் தாக்கத்திலும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் போராட்ம்
2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தங்கள் குடும்பங்களுடன் இரவு, பகலாக தண்ணீர் மட்டும் குடித்து போராடி வருகின்றனர். இரவு நேரங்களில் கொசுத் தொல்லையுடன், குளிரும் வாட்டும் நிலையில் வெறும் தரையில் படுத்து ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
குற்றச்சாட்டு
போராட்டம் தீவிரமானதால் சம்பவ இடத்தில் போலீஸாரும், மருத்துவக் குழுவினரும் தயாராக உள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டு மயக்கமடைபவர்களுக்கு அங்குள்ள முகாமில் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு தேவையான கழிவறை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பின்வாங்க போவதில்லை
இதுவரை உடல்நலக் குறைவால் 200க்கும் அதிகமான ஆசிரியர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உடல் சோர்வடைந்துள்ளனர். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தாலும் போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
ஊதிய முரண்பாடு
இதற்கிடையே துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தையே அரசு தங்களுக்கு வழங்குவதை சித்தரிக்கும் விதமாக இடைநிலை ஆசிரியர்கள் நேற்று டிபிஐ வளாகத்தில் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். இதுதொடர்பாக இடைநிலை பிரிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறும்போது, ‘‘ஒருநபர் குழு அறிக்கை தாக்கல் செய்த பின்னர் தான் முடிவெடுக்க முடியும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யதாவ் கூறியுள்ளார். ஒருநபர் குழு அறிக்கை பெறாமல் ஊராட்சி செயலர்களுக்கு மட்டும் 3 மடங்கு ஊதியத்தை அரசு உயர்த்தியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
ஊதிய முரண்பாடுகள் உண்மை
பல அரசுத் துறைகளில் ஊதிய முரண்பாடுகள் இருப்பது உண்மைதான். எந்த துறையிலும் ஒருநாள் இடைவெளியில் பணியில் சேர்ந்ததற்கு ரூ.15 ஆயிரம் அளவுக்கு சம்பள வேறுபாடு இல்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தாலும் போராட்டம் தொடரும்'' என்றார்.