மாணவி தற்கொலை...குற்றம் செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை - அண்ணாமலை
குற்றம் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் அவர்களின் சமூக விரோத கட்டமைப்பின் மீதும் எந்த தயவு தாட்சண்யமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை: கோவில் பூசாரி வீட்டில் தங்கியிருந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் மாணவி மரணத்திற்கு நீதி வேண்டும் என்று ஹேஸ்டாக் பதிவிடப்பட்டு ட்ரெண்ட் செய்யப்படுகிறது. குற்றம் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் அவர்களின் சமூக விரோத கட்டமைப்பின் மீதும் எந்த தயவு தாட்சண்யமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ஹேமமாலினி. இவர் தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகளாவார். தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிகாம் படித்து வந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்து கோட்டை கிராமம். இங்கு ஓடை ஓரம் அமைந்துள்ள கோவிலில் வைத்து முனுசாமி என்பவர் அருள்வாக்கு கூறிவருகிறார். இவரிடம் ஹேமமாலினியை அழைத்துச்சென்றுள்ளனர் பெற்றோர்கள். கடந்த 18 மாதங்களாக ஆவி, பேய், பிசாசு உள்ளிட்ட சேட்டையால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உறவினர்களால், அந்த கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அடிக்கடி இக்கோவிலில் அப்பெண்ணை தங்க வைத்து பூஜை செய்து வந்துள்ளனர்.

கோவில் பூசாரி வீட்டில் பூஜை
கோவில் பூசாரி முனுசாமி வீட்டில் அவரது மனைவியுடன் தங்கி பூஜை செய்து வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹேமாமாலினி தனது பெரியம்மா இந்திராணி மற்றும் தங்கையுடன் கோவிலுக்குச் சென்று பூஜை செய்துள்ளார். நள்ளிரவு பூசாரி முனுசாமியின் மனைவியுடன் தூங்கச் செல்வதற்கு முன்பு ஹேமமாலினிக்கு தேங்காய் பூசணிக்காய் எலுமிச்சம்பழம் சுற்றி திருஷ்டி கழித்து உள்ளனர்.

பூசாரிக்கு பணிவிடை
இரவு ஹேமமாலினி உடன் வந்த அவரது தங்கை உள்ளிட்ட நான்கு பெண்கள் கோவில் பூசாரி முனுசாமிக்கு இட்லி தோசை சமைத்து கொடுத்ததுடன் பரிமாறி பணிவிடை செய்து உள்ளனர். பூசாரி முனுசாமியின் அறையில் ஹேமாமாலினி மற்றும் அவரது தங்கை படுத்து தூங்கி உள்ளனர். அதிகாலையில் ஹேமமாலினி திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து மயங்கி பேச்சு மூச்சின்றி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். கோவில் பூசாரி முனுசாமியின் மனைவி மட்டும் எழுந்து வந்து மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஹேமமாலினியின் பெரியம்மா இந்திராணியை எழுப்பி கூறியுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
இரண்டு மணி நேரம் கழித்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்குக் கூட தகவல் தெரிவிக்காமல் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். உயிருக்கு போராடியவரை அருகில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெங்கல் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மாணவி மரணம்
அங்கிருந்து இரண்டு மணி நேரம் கழித்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த கல்லூரி மாணவி ஹேமமாலினி சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் பூசாரியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மரணத்திற்கு நீதி வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

18 மாதங்கள் தங்கிய மாணவி
எவ்வித அனுமதியும் இன்றி கோவிலில் இளம்பெண்களை தங்க வைக்க அனுமதி வழங்கியது என்றும் மாணவி தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி 18 மாதங்கள் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பூசாரி வீட்டில் தங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்ணாமலை ட்வீட்
மிகுந்த வேதனைக்குள்ளாகிற கடும் கண்டனத்துக்குறியச் சம்பவம் இது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.குற்றம் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் அவர்களின் சமூக விரோத கட்டமைப்பின் மீதும் எந்த தயவு தாட்சண்யமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும்.#Justice4Hemamalini என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications