சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக கொட்டித்தீர்த்த கோடை மழை - சட்டென்று மாறிய வானிலையால் பரவிய குளுமை
தமிழகத்தில் மாலை வரை சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக பல ஊர்களில் கனமழை கொட்டித்தீர்த்தனது. வெம்மை தணிந்து குளுமை பரவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி அனைவரையும் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெப்பம் சலனம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கொட்டிய கனமழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
அனல்காற்று வீசும் போது சட்டென்று வானிலை மாறி குளுமையான காற்றுடன் மழை பெய்தால் எப்படி இருக்கும். கோடை காலத்தில் வருணபகவானின் கருணையால் சில நேரங்களில் அப்படி மழை பெய்யும். கூடவே இடியும் மின்னலுமாக பலத்த காற்றும் வீசும்.

காலை முதலே தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவானது. அனல்காற்று வீசியதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர் மாலை நேரத்தில் திடீரென குளுமையான காற்று வீசியது.
கிருஷ்ணகிரி, நாமக்கல், பரமத்தி வேலூர் பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்றுடன் இடியும் மின்னலுமாய் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.
சொன்ன மாதிரியே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த மழை வருகிறது pic.twitter.com/tsA0mQiFbE
— karu.prabhakaran (@karuprabhakaran) April 5, 2021
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை கொட்டித்தீர்த்தது.
நல்லவரின் நல்லாட்சி தொடர..வருணபகவான் ஆசி...ஈரோட்டில்..கோடை மழை..💐💐💐💐💐 pic.twitter.com/A46M80tZlP
— Maha Simha (@maha_simha) April 5, 2021
நீலகிரி, கூடலூர் மற்றும் அதன்சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்தது. கோவை, தடாகம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுமார் 2 மணி நேரம் மழை பலத்த மழை கொட்டியதால் வெள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டியது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். கரூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
சிவகங்கையில் ஒரு மணி நேரம் மழை பெய்தது. மானாமதுரையில் பலத்தகாற்றுடன் மழை பெய்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சில பகுதிகளில் அரை மணி நேரம் பெய்தது. தேனி,கம்பம் சுற்றுவட்டாரபகுதிகளில் அரை மணி நேரம் மழை பெய்தது. தென்காசி, செங்கோட்டையில் அரை மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சியின் காரணமாக இன்று வட தமிழகம் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. 8ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்றும் 9ஆம் தேதி தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கணித்தது போல இன்று பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பல இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications